Saturday, October 29, 2016

ஓடும் செம்பொன்னும் - சிறுகதை


படுத்து புரளும் போது உடல்வலி அதிகமாக தெரிந்தது. கால் கெண்டைச் சதைகள், குதிகால்கள் நெருக்கிப் பிடித்தாற்ப்போல் வலித்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கடை மூடிவிட்டாலும் மறுநாளுக்காக மாவு அரைத்து காய் நறுக்கிவைத்து தயார் செய்ய வேண்டியிருக்கிறது. டேபிள், சேர்களை துடைத்து ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஓட்டல் கடை நடத்துவது மல்யுத்தம் செய்வதைவிட அதிக வலிதரும் விசயமாக இருந்தது அவனுக்கு.

அவன் பரவாயில்லை. அவன் மனைவி இன்னும் பாத்திரங்களை வரட், வரட் என்று தேய்த்துக் கொண்டிருக்கிறாள். விரல் ரேகைகள் பாதி தேய்ந்து போயிற்று - மீதி தேய்ந்து கொண்டிருக்கிறது. அவள் படுக்க பதினொன்று கூட ஆகலாம். இறக்கமுடியாத பாரம். அவன் சலித்துக் கொள்வான்.
 

பாத்திரங்களை தேய்த்து கவிழ்த்து வைத்து தூங்க வந்தாள். வழக்கமாக அவள் வரும்போது தூங்கியிருப்பான். இன்றைக்கு விழித்தபடி இருந்தான். விழித்தபடி என்றால் அரைக்கண் செருகி அரைக்கனா கண்டபடி இருந்தான் கால்வலி கொஞ்சம் கூடுதலாக தெரிந்தது.

முகத்தை கழுவி துடைத்தபடி வந்தவள் பக்கத்தில் தூங்கிய பையனின் போர்வையை சரிசெய்துவிட்டு ஓய்ந்து உஸ்சென்று உட்கார்ந்தாள்.

“இன்னும் தூங்கலையா நீங்க..?

“தூக்கம் வரலை... குதிகால் வலி அதிகமா தெரியுது

தைல பாட்டில் தேடி எடுத்துவரப் போனாள். கால்வலி என்றால் தைலம் பூசுகிறாள். தலைவலி, உடல்வலி எல்லாவற்றிற்கும் தன் பாத்திரம் தேய்த்து, காய் அறுத்து, சமைத்து, சப்ளைசெய்து ஓய்ந்துபோன குச்சு விரல்களால் நிவாரணம் தருகிறாள். ஒருநாள்கூட இவனிடம் கால் வலிப்பதாகவோ பாதம் நோவதாகவோ சொன்னதில்லை. குதிகால் பித்தவெடிப்பில் ரத்தம் வரும் போது நொண்டி நடந்தாலும் அப்படித்தான் சொல்ல மாட்டாள். சொல்லி என்ன ஆகப்போகிறது. அவரவர் வலியை அவரவர்தானே தாங்க வேண்டும்.

“எங்க... இங்கயா?
தைலம் பூசுகிறாள்.

ஆகாய உசரம் -சிறுகதை


நம்பமுடியாத கதை புளுகுபவள் என்று ஊரில் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த நான் ஏழு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு அவமானப்பட்டுவிட்டேன். இனியும் அப்படி அவப்பெயர் எடுத்தால் எட்டாம் தலைமுறைக்கும் அவமானம் வந்துவிடும் என்பதால் ஒரு முடிவு எடுத்தேன். இனி சாப்பிடும் சாப்பாட்டில் கல் இருந்தாலும் இல்லாமல் போனாலும் சரி, நாலு பேருக்கு முன்பாக எதைச் சொன்னாலும் நம்பும்படி உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்பது என் முடிவு. அதன்படிதான் இப்பொழுது நம்பத்தகுந்த விதத்தில் நான் பேசியும் வருகிறேன். மீனுக்கு நாலு கால் என்று நான் புளுகிச் சொன்ன காலத்தை மனசில் வைத்துக்கொண்டு இப்பொழுது நாய்க்கு நாலு கால் என்று சொன்னாலும் நம்பமாட்டேன் என்று அடம் பிடிப்பது கைகால் அத்தனையும் முழுசாகவும், மூளை மொத்தமும் அறிவாகவும் இருக்கிற மனுஷர்களுக்கு எப்படி அழகானதாய் இருக்கும்?

நான் ஒரு பரம்பரைப் புளுகுணித்தாய் என்று ஆளாளுக்கு அவர்களாகவே நினைத்துக் கொண்ட ஒரே காரணத்துக்காக நான் சொல்வதை நம்பவே மாட்டேன் என்கிறார்கள். நம்பவில்லையென்றால் நாலுகாசு நஷ்டமில்லை, முதலுக்கு லாபம் என்று விட்டுவிடுவேன். ஆனால் நான் ஒரு புளுகுணித்தாய் என்பதற்காக எனக்கு எதிலும் எந்தவிதத்திலும் சந்தேகமும் வரக்கூடாது, எந்த கேள்வியும் யாரிடமும் கேட்கக்கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்? சில ஆட்களிடம் நான் தேவையற்ற விபரீதக் கேள்விகளை கேட்டு அவர்களை திகைப்பூண்டு மிதித்த நிலைமைக்குத் தள்ளி நினைப்பு நிலவரம் இல்லாமல் செய்துவிடுகிறதாக கதைகட்டி விட்டிருக்கிறார்கள் ஊரில். அதனால் நான் சொல்வதை கேட்காமல் போனதுமில்லாமல் நான் கேட்பதற்கு பதில் சொல்லாமலும் போய்விடுகிறார்கள் சில திகைப்பூண்டு மிதித்து நினைப்பற்றுத் திரிபவர்கள்.

என் புருசன்காரன்தான் பாவம், தண்ணி போட்டுவிட்டு வந்து நடுத் தெருவில் என்னை அடித்தாலும் எனக்கு சரிக்கு சமமாய் உட்கார்ந்து தைரியமாய் என் சந்தேகங்களுக்கும், நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் எதிர்க்கேள்வியாவது கேட்டுக்கொண்டு இருந்தான்.

அப்படி எனக்கு சமீபத்தில் வந்த சந்தேகத்தை என் புருசன்காரனிடம் கேட்டேன். “கருவாட்டுக்கு குழந்தை பிறந்தால் அதுவே நீந்துமா, இல்லை நீச்சல் கத்துத் தரணுமா?” இந்தக் கேள்வி, கிறுக்கிக்கு பித்தமேறிக் கொண்டால் படுத்தவாக்கில் இருந்துகொண்டு கேட்கும் கேள்விபோல கிறுகிறுப்பாய் இருந்தாலும் என் புருசன்காரன் திடமாய் ஆடாமல் என் முன்னால் உட்கார்ந்திருந்தான்.