சில விநாடிகளுக்கு முன்பு எதிர்பாராமல் ஒரு
சம்பவம் நடந்தது. சற்று இடறியிருந்தாலும் உயிர்ப்பலி நேர்ந்திருக்கும். அதுவுமில்லாமல் நடந்தது ஒரு சாகசச் சம்பவம். பத்தாவது
மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு இளம் பெண்ணை லம்பன் உயிரைக் கொடுத்து
காப்பாற்றியிருக்கிறான். அது நிச்சயமாக ஒரு சாகசமேதான்.
லம்பனுக்கு இருதயம் படபடக்கிறது. அத்தனை
அழகான பெண்ணை இதுவரை இத்தனை நெருக்கத்தில் அவன் சந்தித்ததில்லை. அணைத்துக் கொள்ள வேண்டும்
போல அத்தனை இளமையாக. அழகான பெண் அவள். அவள் கண்கள். அந்தக் கண்களில் தெரிவது நன்றியா..
காதலா?
“உனக்கு ஒண்ணுமில்லயே.. யார் நீ? எதுக்கு
சாகப் பாத்த?” லம்பன் விசாரிக்கிறான்.
“ரொம்ப அழகா இருக்க.. கண் ஜாடை காட்டினா
இளவரசி மாதிரி பாத்துப்பாங்க.. சாகற அளவுக்கு என்ன பிரச்சனை..?”
“உன்ன மாதிரி ஆம்பளைதான்டா பிரச்சனை..”
காப்பாற்றப் பட்ட பெண், காப்பாற்றிய லம்பனை,
மாடியின் விளிம்பிலிருந்து எதிர்பாராத தருணத்தில் கோபத்தோடு தள்ளிவிடுகிறாள். லம்பன்
அலறியபடி தரை நோக்கி வீசப்படுகிறான். எல்லாம் முடிந்துவிட்டது. லம்பன் சாகப்போகிறான்.
கடைசி தளம் வரும்போது, கபாலம் சிதறி சாவதற்கு சிலவினாடி முன்பு, தூக்கம் கலைகிறது.
அது கனவு. ஆமாம் கனவு. ஆனாலும் பயத்தில் முகமெல்லாம் வியர்த்திருக்கிறது.
லம்பன் கணக்குப்படி ஆயிரத்திற்கும்
மேற்பட்ட சாவை கனவில் கண்டிருக்கிறான். அவனே செத்துப்போனதும் அதற்குள் அடக்கம். செத்தது
போல கனவு காணாத மனிதர்கள் உலகத்தில் இருக்க மாட்டார்கள். லம்பனுக்கு வயது வேறு கூடிவிட்டது. இப்போதெல்லாம் தின்றது
செரிப்பதில்லை. வாயுக் கோளாறு, நெஞ்செரிச்சல், தூக்கமின்மை. அதனால் சற்று கூடுதலாய்
கனவுத் தொல்லை.
இனி தூங்க முடியாது. விடிந்துவிட்டது. எழுந்து
உட்கார்ந்தால் அநியாயத்திற்கு குளிர்கிறது. மின்விசிறியை நிறுத்துகிறான். கட்டிலுக்கு
பக்கத்திலேயே ஜன்னல் இருந்தாலும் எட்டிப்
பார்க்காமல் சூரியன் தெரியாது. சோம்பல் முறிக்கிறான்.
ஜன்னலைத் திறக்கிறான். காலைப் பொழுது அழகாய்த் தெரிகிறது.
உலகத்தை ஆசீர்வதிக்க அவன் ஒன்றும் ஞானி இல்லை. ஆனாலும் முணுமுணுக்கிறான்.
“உலகின் எல்லா உயிர்களும் அன்பும் கருணையும் கொண்டு அமைதியோடு வாழ வேண்டும்.”
பாழாய் போன உலகம் அப்படியா இருக்கிறது. ஒன்றை ஒன்று
கொன்று தின்று ரத்தம் புசித்து... இந்த உலகம் நாசமாய்ப் போகட்டும். கோபத்தில் சபிக்கிறான்.