Saturday, October 29, 2016

ஓடும் செம்பொன்னும் - சிறுகதை


படுத்து புரளும் போது உடல்வலி அதிகமாக தெரிந்தது. கால் கெண்டைச் சதைகள், குதிகால்கள் நெருக்கிப் பிடித்தாற்ப்போல் வலித்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கடை மூடிவிட்டாலும் மறுநாளுக்காக மாவு அரைத்து காய் நறுக்கிவைத்து தயார் செய்ய வேண்டியிருக்கிறது. டேபிள், சேர்களை துடைத்து ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஓட்டல் கடை நடத்துவது மல்யுத்தம் செய்வதைவிட அதிக வலிதரும் விசயமாக இருந்தது அவனுக்கு.

அவன் பரவாயில்லை. அவன் மனைவி இன்னும் பாத்திரங்களை வரட், வரட் என்று தேய்த்துக் கொண்டிருக்கிறாள். விரல் ரேகைகள் பாதி தேய்ந்து போயிற்று - மீதி தேய்ந்து கொண்டிருக்கிறது. அவள் படுக்க பதினொன்று கூட ஆகலாம். இறக்கமுடியாத பாரம். அவன் சலித்துக் கொள்வான்.
 

பாத்திரங்களை தேய்த்து கவிழ்த்து வைத்து தூங்க வந்தாள். வழக்கமாக அவள் வரும்போது தூங்கியிருப்பான். இன்றைக்கு விழித்தபடி இருந்தான். விழித்தபடி என்றால் அரைக்கண் செருகி அரைக்கனா கண்டபடி இருந்தான் கால்வலி கொஞ்சம் கூடுதலாக தெரிந்தது.

முகத்தை கழுவி துடைத்தபடி வந்தவள் பக்கத்தில் தூங்கிய பையனின் போர்வையை சரிசெய்துவிட்டு ஓய்ந்து உஸ்சென்று உட்கார்ந்தாள்.

“இன்னும் தூங்கலையா நீங்க..?

“தூக்கம் வரலை... குதிகால் வலி அதிகமா தெரியுது

தைல பாட்டில் தேடி எடுத்துவரப் போனாள். கால்வலி என்றால் தைலம் பூசுகிறாள். தலைவலி, உடல்வலி எல்லாவற்றிற்கும் தன் பாத்திரம் தேய்த்து, காய் அறுத்து, சமைத்து, சப்ளைசெய்து ஓய்ந்துபோன குச்சு விரல்களால் நிவாரணம் தருகிறாள். ஒருநாள்கூட இவனிடம் கால் வலிப்பதாகவோ பாதம் நோவதாகவோ சொன்னதில்லை. குதிகால் பித்தவெடிப்பில் ரத்தம் வரும் போது நொண்டி நடந்தாலும் அப்படித்தான் சொல்ல மாட்டாள். சொல்லி என்ன ஆகப்போகிறது. அவரவர் வலியை அவரவர்தானே தாங்க வேண்டும்.

“எங்க... இங்கயா?
தைலம் பூசுகிறாள்.

ஆகாய உசரம் -சிறுகதை


நம்பமுடியாத கதை புளுகுபவள் என்று ஊரில் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த நான் ஏழு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு அவமானப்பட்டுவிட்டேன். இனியும் அப்படி அவப்பெயர் எடுத்தால் எட்டாம் தலைமுறைக்கும் அவமானம் வந்துவிடும் என்பதால் ஒரு முடிவு எடுத்தேன். இனி சாப்பிடும் சாப்பாட்டில் கல் இருந்தாலும் இல்லாமல் போனாலும் சரி, நாலு பேருக்கு முன்பாக எதைச் சொன்னாலும் நம்பும்படி உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்பது என் முடிவு. அதன்படிதான் இப்பொழுது நம்பத்தகுந்த விதத்தில் நான் பேசியும் வருகிறேன். மீனுக்கு நாலு கால் என்று நான் புளுகிச் சொன்ன காலத்தை மனசில் வைத்துக்கொண்டு இப்பொழுது நாய்க்கு நாலு கால் என்று சொன்னாலும் நம்பமாட்டேன் என்று அடம் பிடிப்பது கைகால் அத்தனையும் முழுசாகவும், மூளை மொத்தமும் அறிவாகவும் இருக்கிற மனுஷர்களுக்கு எப்படி அழகானதாய் இருக்கும்?

நான் ஒரு பரம்பரைப் புளுகுணித்தாய் என்று ஆளாளுக்கு அவர்களாகவே நினைத்துக் கொண்ட ஒரே காரணத்துக்காக நான் சொல்வதை நம்பவே மாட்டேன் என்கிறார்கள். நம்பவில்லையென்றால் நாலுகாசு நஷ்டமில்லை, முதலுக்கு லாபம் என்று விட்டுவிடுவேன். ஆனால் நான் ஒரு புளுகுணித்தாய் என்பதற்காக எனக்கு எதிலும் எந்தவிதத்திலும் சந்தேகமும் வரக்கூடாது, எந்த கேள்வியும் யாரிடமும் கேட்கக்கூடாது என்று சொன்னால் என்ன அர்த்தம்? சில ஆட்களிடம் நான் தேவையற்ற விபரீதக் கேள்விகளை கேட்டு அவர்களை திகைப்பூண்டு மிதித்த நிலைமைக்குத் தள்ளி நினைப்பு நிலவரம் இல்லாமல் செய்துவிடுகிறதாக கதைகட்டி விட்டிருக்கிறார்கள் ஊரில். அதனால் நான் சொல்வதை கேட்காமல் போனதுமில்லாமல் நான் கேட்பதற்கு பதில் சொல்லாமலும் போய்விடுகிறார்கள் சில திகைப்பூண்டு மிதித்து நினைப்பற்றுத் திரிபவர்கள்.

என் புருசன்காரன்தான் பாவம், தண்ணி போட்டுவிட்டு வந்து நடுத் தெருவில் என்னை அடித்தாலும் எனக்கு சரிக்கு சமமாய் உட்கார்ந்து தைரியமாய் என் சந்தேகங்களுக்கும், நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டாலும் எதிர்க்கேள்வியாவது கேட்டுக்கொண்டு இருந்தான்.

அப்படி எனக்கு சமீபத்தில் வந்த சந்தேகத்தை என் புருசன்காரனிடம் கேட்டேன். “கருவாட்டுக்கு குழந்தை பிறந்தால் அதுவே நீந்துமா, இல்லை நீச்சல் கத்துத் தரணுமா?” இந்தக் கேள்வி, கிறுக்கிக்கு பித்தமேறிக் கொண்டால் படுத்தவாக்கில் இருந்துகொண்டு கேட்கும் கேள்விபோல கிறுகிறுப்பாய் இருந்தாலும் என் புருசன்காரன் திடமாய் ஆடாமல் என் முன்னால் உட்கார்ந்திருந்தான்.

Thursday, September 8, 2016

பரதேசி ராஜாவின் இளவரசிகளும் கறிக்குழம்பும் - சிறுகதை



 “இன்னைக்கும் களியும் கீரகொழம்பும் தானா...? சிணுங்கியவளுக்கு உடனடியாக தலைமேல் பலன் கிடைத்தது,

அம்மா இத்தனை வலுவாக தலையில் அடிப்பாள் என்று அந்த குழந்தை எதிர்பார்க்கவில்லை பாவம், வீட்டின் மூத்த பிள்ளை தலையில் அடி வாங்கியதும் மற்ற பிள்ளைகள் பேசாமல் பிசுபிசுப்பாய் தட்டில் கருத்து உருண்டிருந்த களியை. உப்பும் காரமும் குறைச்சலான புளியங்காய் புளிப்புடன் ஒரு மார்கமாக கீரைக் குழம்பு என்று பெயர் எடுத்த பச்சை திரவத்தில் தொட்டு விழுங்கிக் கொண்டிருந்தன,

“நான் நாலு மகாராணிங்கள பெத்து போட்டிருக்கேன், தினத்துக்கும் சுடச்சுட சோறும் பருப்புக் கொழம்பும் வச்சி தரேன், பொரியல்கூட ரெண்டு வகையா செஞ்சி வச்சிடறேன், சாப்டுட்டு போய் தாயம் வெளையாடிட்டு இருங்க போங்க,

நான்கும் பெண் பிள்ளைகளாக பிறந்துவிட்டது, அந்த குடிகாரன் ஒவ்வொரு சாமியாக வேண்டிக்கொண்டு “இந்த முறை ஆம்பள புள்ளைதான் பாத்துக்கடி...
என்று பார்க்கச் சொல்லி பிறந்த நான்குமே பொட்டைங்க, திரும்ப எந்த சாமிய வேண்டிக்கிட்டு அடுத்த பிள்ளைய பெத்துக்க சொல்லுவானோ தெரியல,

Monday, August 29, 2016

பொய் - சிறுகதை



தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது அப்பாவின் பழைய ஈஸி சேர் இரண்டாக உடைந்தபோது, நான் தரையில் மல்லாக்க விழுந்துகிடந்தேன். என் முதுகெலும்பின் நடுவில் நாய் கடிப்பது போன்ற வலி. நிமிஷா பதறி ஓடி வந்தாள். “ஐயோ மாமா! ஈஸி சேரைத் திருப்பிப் போட்டுக்கிட்டு ஏன் தலைகீழா நிக்கிறீங்க? என்று ஏழு வயதுச் சிறுமி அப்பாவியாகக் கேட்டதும்தான், நான் எத்தனை அலங்கோலமாக, விபரீதமாக விழுந்திருக்கிறேன் என்பது புரிந்தது.
பிரசவத்துக்குப் பிறகு வாக்கிங் போகிற ஒட்டகச் சிவிங்கிபோல எழுந்து நின்றவனிடம், நிமிஷா அந்த அதிர்ச்சிகரமான சங்கதியைச் சொன்னாள், “மாமா, ஜெயந்தி அக்கா வாந்தி எடுக்கறா!
ஈஸி சேரில் இருந்து நான் விழுந்தது உண்மை. ஆனால், புருஷனைப் பார்த்து பெண்டாட்டி வாந்தி எடுக்கிற அளவுக்குப் பயங்கரமாக விழவில்லை. நான் ஆத்திரத்தோடு ஜெயந்தியைப் பார்க்கப்போனேன். கத்தி காட்டிய திருடனுக்கு முன்னால் நிற்கிற முழுச் சம்பளக்காரனைப்போல வியர்த்து விகாரமாக இருந்தாள். என்னைப் பார்த்ததுமே துவண்டு தரையில் படுத்துக்கொண்டாள்.

Sunday, August 28, 2016

நாமும் நமது தலைமுறையும்.


காடும் மழையும் 
வெட்டவெளியும் 
வின்மீனும் கலையும் 
பொய்யென்று பொய்க்க.. 
மெய்நிகர் மின்னுலகில் 
வாழ்ந்து சலிக்கிறார்கள்
 பிள்ளைகள்.




Wednesday, August 24, 2016

புதர் வீட்டில் யாரோ வசிக்கிறார்கள் - சிறுகதை


    நாதன் தான் வசிப்பதற்காக ஒரு நூதனமான வீட்டை வெகு காலம் தேடிக்கொண்டிருந்தான். அவன் ஏகத்திற்கும் வசதியுள்ள சம்பாதிக்கும் திறமைசாலி. அந்த ஒரு காரணத்திற்காகவே நூதன வீடு, நூதன பொருட்கள், நூதன பெண்கள் இப்படி எதையும் தேடும் அறுகதை பெற்றவன். (நாதன் தேடிய நூதனப் பெண் பிறகு வருவாள்) நாதன் தேடிய வீடுதான் நூதனமே ஒழிய நாதன் நூதனமான ஆள்; கிடையாது.

பூதகணங்களால் கட்டப்படும் விசித்திர வேலைப்பாடுள்ள ஒரு வீட்டை அவன் தேடவில்லை. மாறாக மரங்கள் அற்ற பிரதேசத்தில் இருக்கும் ஒரு வீட்டை விரும்பினான். மரமோ அல்லது மரத்தின் அத்தைப் பிள்ளைகளான தாவரம், கொடி, புல், பூண்டு, புதர் இப்படி எதுவுமற்ற பிரதேசத்தில் இருக்கும் சுத்த ஜடப்பொருள் சூழ்ந்த வீட்டை விரும்பினான். அப்படி ஒரு வீடு கடும் பாலை, அல்லது நெடும் பனிக்கடல், அல்லது கண்காணா வேறு கிரகத்தில் தான் இருக்கும், இங்கே அப்படி ஒன்று கிடையாது என்று சுத்த சத்தியமாய் சொல்லிவிட்டார்கள், அவன் விசாரித்த அத்தனை ஜாம்பவான்களும்.

தோற்றபொழுதில் மனசுடைந்து குப்புறப்படுத்து புலம்புவதில் நம்பிக்கையற்ற நாதன் தனக்கான மரமற்ற பிரதேசத்தை தானே தேடிக் கண்டு அங்கே ஒரு வீட்டை தானே கட்டி எழுப்ப முடிவெடுத்தான். பிரதேசம் என்றால் அது நதி, குளம், ஏரிகள் கொண்ட பெரும் நிலமாய் விரிந்து கிடக்கவேண்டிய அவசியமில்லை, ஊருக்குள் ஒரு வீடு கட்டுமளவுக்கான நிலமும் பிரதேசமே என்று அவன் எடுத்த தீர்மானம்தான் அவனுக்கு ஆசைப்பட்டபடி வீடு கிடைக்;க வாய்ப்பளித்தது.

ஒரு அகலமான இடத்தை வாங்கி, அகலமான வீட்டைக் கட்டி, உயரமான மதில் சுவரால் அதை வெளித்தெரியாமல் மறைத்து, மதிற்சுவருக்குள் ஓரிலைத் தாவரமோ மக்கிய காளானோ புல்லோ பாசியோ கள்ளியோ முள்ளியோ காயோ கனியோ முளைப்போ துளிர்ப்போ இல்லாதபடி ஒரு மலுமலுப்பான கண்ணாடிப் பளிங்கு போன்ற வீட்டுக்குக் குடியேறினான். வீட்டின் சுவற்றிலோ கதவிலோகூட மரத்தை அடையாளப்படுத்தும் ஓவியங்களோ சிற்பங்களோ வர்ணங்களோ இல்லாமல் பார்த்துக்கொண்டான். கதவுகளும் ஜன்னல்களும் நாற்காலி மேஜைகளும்கூட மரத்தால் செய்யப்பட்டவை அல்ல.

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு - சிறுகதை


 “அப்பா நானு...” என்ற குழந்தைக்கு முத்தம் தந்துவிட்டு “நான் ரொம்ப தூரம் போறேன்... இங்கயே இருடா” என்று சொல்லி செருப்பை மாட்டிக்கொண்டேன். குழந்தையின் பார்வையில் தங்கிய விரோதம் கலந்த விரக்தியை கவனித்தேன். இன்னொரு “அப்பா நானு...” என்றால் அறை விழும் என்பது அதற்கு நன்றாகத் தெரியும். ரெண்டரை வயதில்லையா? எனக்கு பாவமாய்போய் என் கால்கோடி பெறுமானமுள்ள முத்தமொன்றை வாரி வழங்கி, பக்கத்தில் நின்றிருந்த மனைவியை சினிமாவில் வருகிற புருசன் போல் அர்த்த புஷ்டியுடன் பார்த்தேன்.

சினிமா மனைவியாக இருந்திருந்தால் வெட்கப்பட்டோ அல்லது ச்சீ... போ என்றோ சொல்லியிருப்பாள். இன்றைய தேதிக்கு அவள் சினிமா பாணியில் கன்னம் சிவக்க வெட்கப்பட்டு உதட்டை புறங்கையால் மூடி “கொழந்தை இருக்கா” என்று செல்லமாய் சிணுங்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவளும் அவ்வாறு செய்யவில்லை. இருந்தாலும் நான் அந்த அர்த்தபுஷ்டியுடன் பார்த்தேன். அவள் வெட்கப்பட்டு நாணம் மேலிட என்னிடம் பேசியதெல்லாம் ஒரு காலம். இப்பொழுது கோயில் வாசலில் விளக்கை கையில் ஏந்தியபடி நிற்கும் ஆளுயர பெண் சிலைபோல் எனக்கு குழந்தையை முத்தமிட காட்டியபடி நின்றாள்.

நான் மன்னனைப் பாடி பரிசோடு வந்த காலங்களில், பொன் கலங்களில் சுடு சோறிட்டு வெண்சாமரம் வீசியவள்தான் இவளும். நான் மன்னர்களைப் பாடுவதை நிறுத்தி, பின் வெண்சாமரமும், பொன்கலமும் நீங்கலாக மற்றதெல்லாம் சத்தமில்லாமல் சப்தமால்ஜெயின் அடகு கடையில் வைத்து, கடை சேட்டின் கைபட்டு சாபவிமோசனம் அடைந்தன.

Sunday, August 21, 2016

வாழைக் குமரியும் வயதான எருமையும்.


தேவகி அரசாங்க மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தலைசிறந்த குழந்தைப் பேறு மருத்துவர் என்று பெயரெடுத்தவர்;. அரசாங்க சேவையில் இருக்கிறவரையில் தனியாக கிளினிக் வைத்து காசு பார்க்காதவர். ஓய்வுக்கு பிறகு, சும்மாயிருக்க சங்கடமாயிருக்கிறதென்று குட்டி மருத்துவமனை ஆரம்பித்தார். ஆரம்பித்த வேகத்திலையே இழுத்து மூடவும் செய்தார்.

காய்க்சலுக்கு வெறும் பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கிற மருத்துவர்களை யார் மதிப்பார்கள்? வெயிலில் நின்றால் வேர்க்கிறது என்று சொன்ன நிமிடமே, ரத்தத்தில் ஆரம்பித்து கண,; காது, வாய், மூக்கு என்று சகல உறுப்புகளையும் தனித்தனியாக பரிசோதித்து, சிலப் பல ஆயிரங்களை லவட்டிக்கொண்டு கடைசியில் ஒன்றும் இல்லை என்று சொன்னால்தான் திறமையான டாக்டர் என்று ஒப்புக்கொள்வார்கள். தேவகிக்கு பொய் சொல்லி பொருள் தேடுவதில் விருப்பமில்லை. நேர்மையாக, உண்மையாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். இது ஒன்று போதாதா வெகுஜனம் ஒருத்தியை தூக்கி குப்பைக் கூடையில் போட. இதற்கு மேல் இருந்தால், கூட்டுகிற ஆயாவுக்கு கூட சம்பளம் தர முடியாது என்ற நிலவரம் வந்ததும்;, கிளினிக்கை மூடிவிட்டார்.

இனிமேல் பணத்தின் பின்னால் மூச்சிறைக்க ஓடக் கூடாது என்று முடிவெடுத்து, ஜனப் புழக்கம் அதிகமில்லாத கிராமத்தில் அந்திமக் காலத்தை கழிக்க முடிவெடுத்தார்;. குக்கிராமத்தில் தங்கினால் சுத்தமான காற்றைச் சுவாசிக்கலாம் என்று வந்தவருக்கு, மக்களின் கிறுக்குத்தனங்களும், நம்பிக்கைகளும், அதிர்வெடி மருத்துவங்களும் பார்க்கப் பார்க்க கலவரமாய்; இருந்தது. வந்தது அரதப் பழைய கிராமம். நல்ல பசுமையான மரங்களும், பனை மரத்தில் பேய் இருக்கும் என்று நம்பும் ஜனங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Thursday, August 18, 2016

வயல் பூதம்.


கனவில்லாத நிம்மதியான உறக்கம் குழந்தைகளுக்குத்தான் வரும். கனகு மீசை பருவத்து இளைஞன். பருவத்திற்குண்டானபடி அவன் துர்சொப்பனங்கள் காண்பதில்லை. தலையணையில் தலை வைத்தால் கண்களில் தூக்கம் இருக்கும். மூக்கில் சன்னமாய் குரட்டையொலி. நிம்மதியான ஆத்மா. அப்பா அவனுக்கு சைக்கிள் விடக் கற்றுக் கொடுத்ததைப் போலவே தூங்கவும் கற்றுத் தந்திருக்கிறார். அவர் கனகுவின் ஆலமரம். உணவும் அவரே, நிழலும் அவரே!

கண் விழித்ததும் கனகு வெங்கலராஜ பெருமாளை தரிசிப்பான். அது அவன் குலதெய்வம். மனைவியைத் தேடி குதிரையில் சென்ற கடவுள். ஒற்றைக் காலில் உலகலந்த நாயகன். கனகுவின் சட்டைப் பாக்கெட்டில் வெங்கலராஜ பெருமாள் நிரந்தரமாய் இருக்கிறார். தூங்கி எழுந்ததும் முதல் முக்கியமாய் வெந்நீர் வைத்து புகை பறக்கக் குளிப்பான் கனகு. அதன்பிறகு அப்பாவுக்கு தேநீர் போட்டுக் கொடுப்பான். தேநீரென்றால் சாதா ரகமில்லை. தேவாமிர்தத்தின் தங்கையைப் போன்றதொரு பஞ்சாமிர்த ரகம். எல்லோர் கையிலும் விரல் இருக்கிறது, சிலர் விரல்களில் மட்டும் மத்தளம், மிருதங்கம், வீணை, நாதஸ்வரம் என்று நாதம் இருக்கிறது இல்லையா, அப்படி கனகு போடுகிற தேநீரில் மட்டும் வினோத விசேஷம் உண்டு. குடித்தவர்கள் நாக்கு எட்டாக மடித்து சொட்டாங்குச் சத்தத்துடன் சப்பி தேவாமிர்தத்தின் தங்கையை அதிசயிப்பார்கள். ஓயாமல் மனைவியோடு சண்டையாக இருக்கும் சவுரியப்ப வாத்தியார், கனகுவின் தேநீர் பருகிவிட்டு, கண்ணில் கண்ணீரோடு சொல்லியிருக்கிறார், 'கனகு உனக்கு வரப்போற பொண்டாட்டி குடுத்து வெச்சவடா. அவ உன்னோட டீய ஒருவாய் குடிச்சா தினம் ரெண்டு வாட்டி நமஸ்கரிப்பா!"

தாமிரநங்கையின் யாழும் சில தும்பிகளும்.


நல்ல மன ஆரோக்கியத்தோடு இருக்கிற, வெகுநாள் பழக்கமுள்ள சினேகிதன் ஒருத்தன் வீடு தேடிவந்துவைகுண்டத்தில் நடக்கிற ஊர்வசியின் நாட்டியம் பார்க்க முன்வரிசை டிக்கெட் இரண்டு கைவசம் இருக்கிறது வருகிறாயா?” என்று கேட்டால் சட்டென்று நவீன கால மனசுக்கு என்ன ஆகும்? குடிகார ஆந்தை கும்மிருட்டில் கத்தி கலவரமூட்டியது போன்ற அவஸ்தையாகிவிடாதா?
அப்படியொரு அவஸ்தைக்கு ஒருநாள் நான் ஆளானேன். டைட்டல் பார்க்கில் வேலை பார்க்கிற கம்ப்யூட்டர் நண்பன் ஒருத்தன் ஒருநாள் மாலை வீடு தேடி வந்து, “எனக்கு வெள்ளைக் குதிரை ஏகப்பட்டது வேணும்! இங்கே கிடைக்குமா?” என்று கேட்டான்.
நான் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தேன். அவன் குதிரைத் தரகனோ, குதிரை ரேஸ் ஆடுகிறவனோ, ஜட்கா வண்டிக்காரனோ, சரித்திரக் காலத்து குதிரை ஏற்றம் தெரிந்த மகாராஜனோ கிடையாது. நெகுநெகுவென்ற நவீன ரக காரில் வந்து இறங்கிய ஒருத்தன் குதிரை வேண்டும் என்று கேட்டால் நான் சித்த சுவாதீனத்தோடு இருப்பது எப்படி சரியாகும்?
குதிரையா? அது எதுக்குடா உனக்கு?”
கம்ப்யூட்டர் நண்பன் ஆளில்லாத அறையை நன்றாக அலசிப்பார்த்துவிட்டு ரகசியமான குரலில் சொன்னான். “விசயம் இருக்கு ராம். வெள்ளைக் குதிரைக்கு இப்ப ஏக டிமாண்ட், தெரியுமா? அதோட விலை நாளுக்கு நாள் லட்ச லட்சமா கூடிகிட்டே போகுது
குதிரை விலை மட்டுமா? அரிசி விலை, பருப்பு விலை, இரும்பு விலை, கல், மண், செங்கல், இரும்பு ஏரோப்ளேன் என்று எல்லா விலையும்தான் லெட்சக்கணக்கில் கூடிக்கொண்டே போகிறது. அதற்காக வெள்ளைக் கலரில் இருக்கிற பழைய பிளாஸ்டிக் பக்கெட்டை தேடிக்கொண்டு எலிசபெத் ராணியின் புருஷன் அலைகிறான் என்பதை எப்படி ஜீரணிப்பது. அது சரி, திடீரென்று வெள்ளைக் குதிரையின் விலை ஏன் குதிக்கிறது? பெட்ரோல் விலை கூடிப்போனதால் இனி வெள்ளைக் குதிரையில் பிரயாணம் செய்கிற காலம் வரும் என்று குறுந்தாடி வைத்த ஏதாவது வழுக்கைத்தலை விஞ்ஞானி உளறித் தொலைத்துவிட்டானா? அப்படியே இருந்தாலும் வெள்ளைக் குதிரை மட்டும்தான் பெட்ரோல் இல்லாமல் ஓடுமா? பெட்ரோல் இல்லாமல் கழுதை ஓடாதா, எருது இழுக்காதா, கறுப்புக் குதிரை நடக்கவே நடக்காதா?
ராம், நான் சொல்லறது கொஞ்சம் நம்பறதுக்கு சிரமமான விசயம்தான். ஆனா... கண்டிப்பா சொல்லறேன் வெள்ளைக் குதிரை விலை கொடியத் தாண்டும். ஒரே ஒரு வெள்ளைக் குதிரை வெச்சிருக்கிற ஒரே ஒருத்தன் சட்டுனு ஒருநாள் பெரிய கோடீஸ்வரன் ஆயிடுவான். அம்பானி, மிட்டல், பில்கேட்ஸ் ரேஞ்சுக்கு
நல்லவேளை என் மனைவி ஊரில் இல்லை. இவன் பேசுவதைக் கேட்டிருந்தால் பினாயில் பாட்டிலை எடுத்து நடு மண்டையில் போட்டிருப்பாள். பைத்தியங்களைக் கண்டால் அவளுக்கு ஆகவே ஆகாது. வெள்ளைக் குதிரை வைத்திருக்கிறவன் கோடீஸ்வரன் ஆவானாம்! என்ன கிறுக்குத்தனம் இது. ஆனால் கம்ப்யூட்டர் நண்பனின் உலக அறிவு, பணம் பற்றிய ஞானம், அவன் படிப்பின் அளவு, செய்கிற வேலையின் கவுரவம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியும். ஒவ்வொரு நிமிடத்தையும் மந்திரம் போட்டு காசாக மாற்றிக்கொண்டிருப்பவன் அவன். நாடே தன் வாழ்க்கையை அடமானம் வைத்து ஷேர் மார்க்கெட்டில் சூதாடி தன் பொண்டாட்டி தாலியை தொலைத்துவிட்டு நிற்கையில் இவன் மட்டும் தன் செக்ரெட்டரிப் பெண் உட்பட ஏழெட்டுப் பெண்களுக்கு இடுப்பு அகலத்திற்கு தங்க நகையை, அதே சூதாட்டத்pல் சம்பாதித்திருக்கிறான். வெள்ளைக் குதிரை ஒருவேளை புது ரகமோ!

Tuesday, August 16, 2016

கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் - சிறுகதை

கன்னி கறுப்பியின் குப்பைச் சேவல் 
காலில் முள் குத்தியிருக்கிறது; கல் குத்தியிருக்கிறது; துரு பிடித்த ஆணி, குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. மனுசனாய் பிறந்தவன் வாழ்வதற்காக அனுபவிக்கிற தொந்தரவுகளில் இதுவும் ஒன்று. பிறந்ததில் இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப்பனுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு அவனுக்கு வருத்தமாகிவிட்டது. மனுசனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிட ஆடு மாடாக பிறந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் அவன். எருமையாகப் பிறந்திருந்தால் குறைந்தபட்சம் செருப்பு வாங்கும் தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்கும். நாலு கால் எருமைக்கு முரட்டுக் குளம்பு இருக்கிறது. இரண்டு கால் உள்ள மனுசன் செருப்பை சம்பாதிக்க வேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகிவிட்டான்.

பாட்டப்பன் ஒரு கல்யாணத்திற்காக அவசரமாக போய்க்கொண்டிருந்தான். மாப்பிள்ளை பெயர் என்ன, எந்த பெண்ணுக்கு கல்யாணம் என்று அவனுக்குத் தெரியாது. எந்த கல்யாண மண்டபத்திற்கு போகவேண்டும் என்றும் தெரியவில்லை. ஊரில் இருப்பதே மூன்று மண்டபம்தான். ஒவ்வொரு மண்டபமாக போய் பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான் அவன் போனான்.

முதல் மண்டபத்தில் ஷாய்ரா பானுவுக்கும், சாகுல் அமீதுக்கும் கல்யாணம் என்றார்கள். எல்லோரும், ~சலாம் அலேக்கும்!| சொல்லிக்கொண்டு, கறுப்பு கறுப்பாய் போர்த்திக்கொண்டிருந்தார்கள். பாட்டப்பன்என்பெயர் முகமது இஸ்மாயில்என்று சொல்லிவிட்டு மண்டபத்திற்குள் போயிருக்கலாம். நெற்றி நிறைய பட்டை பட்டையாக திருநீறு பூசிக்கொண்டு இஸ்மாயில் என்று சொன்னால் புத்திசாலி மனிதர்கள் நம்புவார்களா? அதனால் வேறு மண்டபத்திற்கு கிளம்பினான் பாட்டப்பன்.

இன்னொரு மண்டபத்தில் இருந்த அத்தனைபேரும் சொல்லி வைத்தது போல செக்கச் செவேர் என்று இருந்தார்கள். பெயிண்ட் கடை வைத்திருக்கும், அல்லது சிவப்பு சுண்ணாம்பு சாப்பிடும், அல்லது குங்கும வியாபாரம் செய்கிற குடும்பத்தின் கல்யாணமாக அது இருக்கலாம். அட்டைக் கறுப்பாய் பாட்டப்பன் அங்கே போய் நின்றால் பரம்பரைக் குழப்பம் வந்து கல்யாணமே நின்று போகிற அளவுக்கு கலவரம் வந்தாலும் வரும். பயந்த பாட்டப்பன் சிவப்பாக இருந்த யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மூன்றாவது மண்டபத்திற்கு நடையைக் கட்டினான்.

மூன்றாவது மண்டபத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் பாட்டப்பனின் சொந்தக்காரர்கள் போல கறுப்பாக இருந்தார்கள். மண்டபத்திற்குள் செல்ல பாட்டப்பனுக்கு கூச்சமாக இருந்தது. கல்யாணத்திற்கு வருகிறவர்கள் வந்தோமா, கல்யாணம் பார்த்தோமா, சாப்பிட்டோமா என்று இருப்பதில்லை. சொந்த பந்தத்தில் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று தேடிப் பிடித்து எவன் செத்தான், எவன் உயிரோடிருக்கிறான், எவன் சவுக்கியமாய் இருக்கிறான் எவன் நாசமாய்ப் போனான் என்று நலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அறிமுகமே இல்லாத பாட்டப்பன் போன்றவர்களை ~நீ யார்?| என்று சௌக்கியம் விசாரிக்கும் கும்பல் கேட்டுவிட்டால் எத்தனை கஷ்டமாகிவிடும். உறவு இல்லையென்றால் என்ன, பந்தல்காரன், சமையல்காரன், லைட் பற்றவைப்பவன் என்று ஏதாவது வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிக்கலாம் என்று பதுங்கி பதுங்கி உள்ளே போனவன் கடைசி இறுக்கையில் பதுவிசாக உட்கார்ந்துகொண்டான்.

கல்யாணமண்டபம் ஆணும், பெண்ணும், குழந்தைகளுமாய் கும்மாளமடித்து ஆரவாரமாய் இருந்தது. பெண்கள் அணிந்திருந்த ஏராளமான நகை மற்றும் புடவைகளைப் பார்த்து அரண்டு போனான் பாட்டப்பன். நம்மைப்போல கறுப்பாக இருப்பவர்களும் பணக்காரர்களாக இருப்பார்களா? நம்பவேமுடியவில்லை பாட்டப்பனால். நம்பமுடிகிறதோ முடியவில்லையோ... யார் கண்ணுக்கும் அடையாளம் தெரியாமல் பதுங்கியிருந்துவிட்டு, வந்தகாரியத்தை முடித்துக்கொண்டு ஓடிவிடவேண்டும் என்று கூடுமானவரை தலைதெரியாதபடி தாழ்த்தி உட்கார்ந்துகொண்டான்.

எத்தனை பதுங்கி இருந்தாலும் ஆந்தைக் கண்களுக்கு தவளை தப்புவதே இல்லை. ஒரு இளம் வயது பெண் - கல்யாணம் ஆனவள் போலத்தான் இருந்தாள் - பாட்டப்பனையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். பாட்டப்பனுக்கு பயமாகிவிட்டது. பயத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிப்பது போல அந்தப் பெண் அவனை நோக்கி வந்தாள். வந்தவள் பாட்டப்பனை நோக்கி ஒருகையை நீட்டி, 'நீங்க... நீங்க...!" என்று சந்தேகத்துடன் ஒரே கேள்வியை கேட்க ஆரம்பித்தாள். ஆள் வைத்து உடம்பை உலுக்கியது போல பயத்தில் நடுக்கமெடுத்தது பாட்டப்பனுக்கு. தன் தொடையை தானே நடுங்கச் செய்து மாட்டிக்கொள்ளக்கூடாது என்று நினைத்த பாட்டப்பன், 'அது நான் இல்லைங்க.." என்று நடு மத்தியமாக ஒரு பதில் சொன்னான்.

வெகு காலத்திற்கு முன்பு தொலைந்துபோன யாரையோ திடீரென்று பார்த்தது போல பரவசத்துடனும், அறைகுறையாய் அடையாளம் தெரிந்துகொண்ட சந்தேகத்துடனும் இருந்த அந்த பெண், 'நீங்க நீங்க!" என்று வார்த்தை முடிக்க முடியாமல் சந்தோஷமாகத் திணறினாள்பயமாக இருந்தாலும் பாட்டப்பனுக்கு ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. ஒருவேளை சின்ன வயதில் அவளுக்கு புருசன் காணாமல் போயிருப்பானோ? அவன் என்னைப் போலவே இருப்பானோ? ஆமாம் என்று சொல்லிவிட்டு கூடவே போய்விடலாமா? ஒருவேளை புருசன் தொலைந்ததில் சித்தபிரம்மை பிடித்து, பார்க்கிற புருச வயசு ஆட்களையெல்லாம் தன் புருசனென்று நினைத்து ~நீங்க நீங்க| என்று சொல்லி பைத்தியமடிக்கிறாளா? ரெண்டுங்கெட்டான் குழப்பத்தோடு பார்த்தான் பாட்டப்பன்.

அப்பொழுது பந்தயக்குதிரைபோல மூச்சிரைக்க வந்தாள் ஒரு கிழவி. அவளும் புருசன் தொலையுண்ட பெண்போல ஒரு கையை நீட்டி, 'நீ ராமசாமியா?" என்று மிரட்டுவது போல பாட்டப்பனை கேட்டாள். அவளுக்கு வாயில் நுரை வந்திருந்தால் பந்தயக் குதிரைஎன்று தீர்மானமாய் நம்பியிருப்பான் பாட்டப்பன். கிழட்டுக் குதிரை.

சொல்லு... நீ ராமசாமியா?” மீண்டும் அதட்டியது கிழட்டுக் குதிரை.

'இல்லை. நான் பாட்டப்பன்"

அடுத்த நிமிடம் இளம் பெண்ணை தரதரவேன்று தள்ளிக்கொண்டு போனாள் கிழவி. 'நாந்தான் அப்பவே சொன்னனே! அது உங்க அப்பன் இல்லேன்னு. முப்பது வயசில உங்க அப்பன் காணாம போனான். போயி முப்பது வருசமாச்சி. இவனப் பாத்தா ஐம்பது வயசு ஆளாட்டமா இருக்கான். இவனப் போயி அப்பான்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டியே!"

ஆக, புருசனைத் தொலைத்தவள் இளவி அல்ல... இந்தக் கிழவிதான். குதிரைமூச்சுக் கிழவி போட்ட போட்டையும், கேட்ட அதிகாரத்தையும் பார்த்தால் கிழவியின் புருசன் ஓடிப்போனது சரிதான் என்று தோன்றியது பாட்டப்பனுக்கு. ஆனாலும் கிழவிக்கு இந்த வயதில் கொஞ்சம் கொழுப்பு அதிகம்தான். தாடி வைத்திருக்கிற ஒரே காரணத்திற்காக இருபத்தி ஏழு வயதுள்ள பாட்டப்பனை ஐம்பது வயதுக் கிழவன் என்று அவள் சொல்லலாமா? அதுவும் அவளே ஒரு கிழவி. பாட்டப்பனுக்கு இன்னும் கல்யாணம்கூட ஆகவில்லை. இப்பொழுதுதான் பன்னிரெண்டு நாட்களாக கண்ணம்மா என்கிற ஒரு அடாவடி சிறுக்கியை காதலிக்கவே ஆரம்பித்திருக்கிறான். அதற்குள் கிழவியிடம் கிழவன் என்கிற அசிங்க வார்த்தை. முதல் காரியமாக தாடியை சவரம் செய்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தான் பாட்டப்பன்.

கிழவி போனதும் அப்பாடா என்று நிம்மதி மூச்சுவிட்டான் பாட்டப்பன். அதற்குள் பூதக்கண்ணாடி அணிந்திருந்த இன்னொரு கிழவன் பக்கத்தில் இரும்புச் சேரை இழுத்து போட்டு உட்கார்ந்துகொண்டு பாட்டப்பனை பார்த்து பெரிதாக சிரித்தான். 'நல்லா இருக்கீங்களா தம்பி. வீட்டுல அப்பா அம்மா எல்லாம் சௌக்கியமா?" என்று கேட்டான். இன்றைக்கு கிழடுகள் எல்லாம் சாகடிக்கிற திருவிழா கொண்டாடுகிறார்களா? கடுப்பாக கிழவனைப் பார்த்தான் பாட்டப்பன்.

பாட்டப்பன் பிறந்ததில் இருந்தே இப்படி ஒரு போங்குக் கண் கிழவனை பார்த்ததில்லை. கிழவனை தெரியாது என்று சொலலி தப்பிவிடத்தான் முதலில் நினைத்தான் பாட்டப்பன். ஆனால் அதைவிட புத்திசாலித்தனம் கிழவனின் அரைக்குருடு கண்ணை சரியாக உபயோகப்படுத்திக்கொள்வது என்று முடிவெடுத்தான்முக்கால் கண் வெளிச்சமுள்ள இந்த கிழவன் யாரோ ஒரு அடையாளத்தை தன்னிடம் கண்டுகொண்டு பேசுகிறான். அது நானேதான் என்று சமாளித்துவிட்டால் மற்றவர்கள் சந்தேகப்படாமல் இருப்பார்கள். தொந்தரவும் இருக்காது.

'நான் நல்லா இருக்கேன், தாத்தா. ஆனா அப்பாவுக்கும், அம்மாவுக்கும்தான் கொஞ்சம் சௌகரியம் இல்ல. இருபத்தி மூணு வருசத்துக்கு முன்னாடி செத்துப்போயிட்டாங்க. தகவல் சொல்ல முடியல. மன்னிச்சிடுங்க!" என்றான்.

'என்ன தம்பி நீ. நான் உன்னோட சித்தப்பன். என்னை தாத்தாங்கறே! போனவாரம்தான் உன் அப்பா அம்மாவ கடைவீதியில பாத்தேன். இருபத்தி மூணு வருசத்துக்கு முன்னாடி செத்துட்டாங்கன்னு சொல்லறே! ஆமா, நீ சிவராமன் மகன்தானே!" கண் இல்லாவிட்டாலும் ஞாபகம் இருக்கிற கிழவன் தெளிவாகக் கேட்டான்.

'சிவராமன் மகன் இல்ல. நானே சிவராமன்தான்." என்று சொன்னான் பாட்டப்பன்.

தூரத்தில் நின்றிருந்த புருசனைத் தொலைத்த கிழவியும், அவள் மகளும் பாட்டப்பன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தார்கள். சற்று முன்பு பாட்டப்பன் என்றும் இப்பொழுது சிவராமன் என்றும் ஒருத்தன் சொல்வது அவர்களுக்கு வியப்பாக இருந்திருக்கலாம். பாட்டப்பனுக்கு சிறுவயதில் சிவராமன் என்ற பெயர் இருந்ததும் பாட்டப்பன் என்பது தொழில் நிமித்தமாய் வந்த பட்டப் பெயர் என்பதும் அவர்களுக்கு தெரியாது. வந்த இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்த பாட்டப்பன் போங்குக் கண் கிழவன் அறியாதபடி இடத்தை மாற்றிக்கொண்டான்.

அங்கேயும் வினை இருந்தது. கிழவர்கள் தொலைந்தால் குமரர்கள் வருகிறார்கள். ஒரு சின்ன வயசுக்காரன் பொங்குகிற மகிழ்ச்சியோடு வந்து கையைப் பிடித்துக்கொண்டு அப்புறமாகக் கேட்டான், 'உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே?" கேட்டுவிட்டு வானத்தில் கண்ணை செருகிக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தான். எங்கியோ, எவனையோ பாத்துட்டு வந்து இங்க என் கழுத்தை அறுக்கறானே சள்ள கிராக்கி! பாட்டப்பன் கையை தந்திரமாக பிரித்துக்கொண்டு வேறு இடம் பதுங்கினான். சள்ளை கிராக்கியே பரவாயில்லை என்பது போல இன்னொரு சாவுகிராக்கியின் கையில் அகப்பட்டுக்கொண்டான். அவன் ஒரு வழுக்கைத் தலை ஆசாமி. 'நான் உங்களை எங்கயுமே பாத்ததில்லையே. ஆமா, நீங்க யாரு? யாரோட சொந்தம்?" என்று விபரீதமாய் ஒரு கேள்வி கேட்டான். எங்கயுமே பார்க்காத ஒருத்தன்கிட்ட இவனுக்கெதுக்கு வெட்டிப்பேச்சு....? பாட்டப்பனுக்கு எத்தனை அடக்க நினைத்தாலும் கோபம் கட்டுக்கடங்காமல் வந்துவிட்டது.

இது கல்யாணத்திற்கு வந்திருக்கும் கூட்டமா, இல்லை பைத்தியக்கார கூட்டமா? புதிதாக தெரிகிற ஒருத்தனைப் பார்த்து ஒருத்தி ~அப்பா| என்கிறாள். இன்னொருத்தி ~என் புருசனே இல்லை| என்கிறாள். ஒரு கிழவன் எப்பொழுதோ செத்துப்போன அப்பன் சௌக்கியமா என்று கேட்கிறான். ~எங்கியோ பார்த்திருக்கிறேன்| என்று ஒருத்தனும் ~எங்கியுமே பாக்கலையே| என்று இன்னொருத்தனும் குழப்பியடிக்கிறார்கள். இவர்கள் மனுசர்களா, இல்லை பிசாசு மேய்க்கிறவர்களா? அதெப்படி இங்கிருக்கிற எல்லோருக்கும் நான் தெரிந்தவன் போலவே இருக்கிறேன். பாட்டப்பன் ஆதியோடு அந்தமாய் குழம்பிப்போனான். இன்னும் கொஞ்ச நேரம் இந்த பிசாசு மேய்க்கிற கும்பலில் இருந்தால் முகூர்த்தம் முடிவதற்குள் நமக்கே கல்யாணமாகிவிடும் என்று அச்சப்பட்ட பாட்டப்பன் சாப்பாட்டு பந்தி எந்தப்பக்கம் என்று யாரிடமும் விசாரிக்காமலே நழுவ ஆரம்பித்தான்.

இந்த கல்யாணம் யாருடையது, இங்கே யாருக்கு கல்யாணம் நடக்கிறது என்று உண்மையிலேயே பாட்டப்பனுக்கு ஒரு இழவும் தெரியாது. அவனுக்கு பசியாக இருந்தது. அதனால் சாப்பிட வந்தான். சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு முக்கியமான வேலையும் இருக்கிறது. அதை நினைத்தால்தான் பாட்டப்பனுக்கு திகிலாக இருந்தது. ஒருநாளும் இப்படி ஒரு பழிபாவமானது செய்ததில்லை பாட்டப்பன்

பூமியில் இருக்கிற சாப்பாடு மொத்தத்தையும் ஒரே நாளில் தின்று அழித்துவிடுவது என்ற முடிவோடும் வெறியோடும் ஒரு கூட்டம் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தது. கடைசி வரிசை, கடைசி இலையில் பாட்டப்பன் உட்கார்ந்தான். வைக்கப்பட்ட வகைதொகையான சாப்பாட்டை பார்த்ததும் வியந்துபோனான் பாட்டப்பன். வாழ்நாளில் பார்க்காத அதிசயம் அது. எச்சில் வாயில் ஊற பெரிய லட்டு ஒன்றை எடுத்து நறுக்கென்று கடித்தான். அவ்வளவுதான் பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி எழுந்து நின்று ~அய்யோ அய்யோ| என்று சத்தமாக கத்த ஆரம்பித்தாள்.

பதறிப்போனான் பாட்டப்பன். கை தவறி அந்த பெண் இழையில் இருந்த லட்டை எடுத்து கடித்திருப்போமோ என்று பயந்துபோனான். எமனுக்கே கேட்கிறபடி கத்திய அந்த பெண்ணின் கூச்சல் கேட்டு நாயணக்காரன் ஊதுவதையே நிறுத்திவிட்டான் என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். கும்பலாக கூடிவிட்டார்கள். கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் சங்கிலியை காணவில்லை என்று அழுதபடி சொன்னாள் அந்தப் பெண். பாட்டப்பனுக்கு சந்தோசமாகிவிட்டது. இது லட்டு பிரச்சினை இல்லையா? தப்பிச்சோம். வாயில் இருந்த லட்டை உரிமையோடு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

நகை திருடுபோனது தெரிந்ததும் 'சாத்துடா கதவை" என்று ஒருத்தன் உத்தரவிட்டான். நகையை யார் எடுத்திருப்பார்கள்? ஒருவர் முகத்தை ஒருவர் சந்தேகமாய் பார்த்துக்கொண்டார்கள். நல்லவன், கெட்டவன், யோக்கியன், திருடன் யாராக இருந்தாலும் சரி ஒரே ஒரு கணம் திருடர்களாக தோற்றம் தருகிற தருமசங்கடமான சூழ்நிலை இதுதான். எல்லோருமே ஒரு கணம் திருடர்களாக மாறிவிடுவதும் இப்படித்தான்.

எல்லோரும் திருடனை தேடிக்கொண்டிருக்க, புருசனைத் தொலைத்த கிழவி ஒரு மத்தியஸ்தனிடம் குசுகுசுவென்று பேசுவதை பாட்டப்பன் பார்த்துவிட்டான். அப்பொழுதுதான் அவனுக்கு விபரீதம் உறைத்தது. இந்த கூட்டத்தில் சம்மந்தமில்லாமல் இருக்கிற ஒரே ஆள் அவன்தான். பெயரை மாற்றிச் சொல்லி குழப்பியவனும் அவன்தான். தரும அடி நிச்சயமாகிவிட்டதடா தருமா! தயாராகிவிட்டான் பாட்டப்பன். கட்டம் கடைசியாய் ஒரு கடி லட்டைத் தின்றுவிட்டு முதுகை தயார்படுத்திக்கொண்டிருந்தபோது ஒரு விபரீதம் நடந்தது. சம்மந்தமே இல்லாமல் பாயாசம் ஊற்றிக்கொண்டிருந்த ஒரு சின்ன பையனை இழுத்து வந்து எல்லோரும் தொபீர் தொபீர் என்று அடிக்க ஆரம்பித்தார்கள்.

மயக்கம் போட்ட பையனை தண்ணீர் தெளித்து எழுப்பி, 'சௌக்கியமா?" என்று விசாரித்துவிட்டு மீண்டும் அடிக்க ஆரம்பித்தார்கள். “செயினை எடுத்தியா சொல்லுடா சொல்லுடா?” எத்தனை அடித்தும் அந்த பையன் கேள்விக்கு பதில் சொல்லவேயில்லை. அவன் ஊமையும் கிடையாது. 'அடிக்காதீங்க அடிக்காதீங்க!" என்று காட்டுக்கத்தல் கத்தினான்.

சமையல்காரன் ஓடிவந்து அடிப்பதை தடுத்து நிறுத்தி, 'அவன் செவிட்டு மகன் சாமிங்களா! நீங்க கேக்கறதுக்கு அவனால பதில்சொல்ல முடியாது"

யோவ் செவிடன்னா எப்படியா பேசறான்?” என்று கும்பளுக்கு வெளியே இருந்தவன் கேட்க, “இவன் யார்றாவன்? செவிடுன்னா காதுலதான் கோளாறு இருக்கும். வாய் நல்லாதான் இருக்கும். உங்க ஊர்ல எல்லாம் காதுலதான் பேசுவாங்களா?” என்று கும்பலுக்கு உள்ளே இருந்தவன் பதில் சொன்னான்.

எப்பத்துல இருந்து காது கேக்கலையாம்? பிறவி செவிடா? பாதியிலன்னா தெரிஞ்ச டாக்டர் இருக்காரு..” என்று உயரமானவன் விசாரிக்க, “ஒன்பது பவுன் செயினுக்கு வழி என்ன கேளுங்க?”சங்கிலிப்பெண் கதற,  “ஏம்பா இங்க கொஞ்சம் பாயாசம் கொண்டார்றீய?” என்று சம்மந்தமே இல்லாமல் ஒரு பெண் குரல் கேட்க, “மூடிகிட்டு இருடிஎன்று உறவில் ஒட்டாத ஒருத்தன் கத்த, “நான் சீரங்கத்தோட அத்தை கொஞ்சம் பாத்து பேசு,” என்று எந்த சீரங்கமோ வந்து குதிக்க, “இந்த பையனை யாரு அடிச்சது எனக்கு தெரிஞ்சாகணும்.” என்று சமையல் காண்ட்ராக்டர் களம் இறங்க... குழுகுழப்பமாகிவிட்டது அந்த இடம். கடைசியில் அடிபட்ட பாயாசப் பையனுக்கு குளிர்பானம் கொடுத்து ரகளையை முடித்துக்கொண்டார்கள். செவிடனை அடித்ததற்காக எல்லோருமே வருத்தப்பட்டார்கள்.

'செவிடன் திருடமாட்டானா?" ஒரு பெண் குசுகுசுவென்று யாரிடமோ கேட்க, பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் தேவையே இல்லாமல், 'தோ ரெண்டாவது வரிசையில உட்கார்ந்து ஒரு கூச்சலம் காதில போட்டுக்காம சாப்பிடறானே உன் அக்கா புருசன் அனும் செவிடன்தான். அவன் திருடனாயிருப்பானா? " என்று கேட்டாள். அவர்கள் கழிப்பறைப்பக்கமாக நின்று ஆரோக்கியமாக சண்டை போட ஆரம்பித்தார்கள். ஆக மொத்தத்தில் அந்த செவிட்டுப் பையன் திருடன் இல்லை என்று எல்லோரும் பரிதாபமாக ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அந்த நகை எங்கே? யார்தான் நகை திருடியது?

நடப்பது நடக்கட்டும் எனக்கென்ன வந்தது என்று தின்பதே தொழிலாக இருந்த பாட்டப்பன் மீது எல்லோர் பார்வையும் விழுந்தது. 'ஸார் யாரு? யார் வீட்டு உறவு?" ஒருத்தன் எகத்தாளமாக கேட்டபடி பாட்டாப்பன் அருகில் வந்தான். பாட்டப்பனுக்கு தருமசங்கடமாகிவிட்டது. பெண் வீட்டுக்காரனிடம் மாப்பிள்ளை வீட்டு ஆள் என்றும், மாப்பிள்ளை வீட்டுக்காரனிடம் பெண் வீட்டு ஆள் என்றும் சொல்லி ஒருத்தன் தப்பிக்கலாம். இரண்டு பேரும் ஒன்றாய் இருந்தால் சமையல்காரன், நாயணக்காரன், பந்தல்காரன் என்றும் சொல்லியும் தப்பிக்கலாம். கல்யாணமண்டபத்தில் திருட்டு சோறு தின்பவர்களெல்லாம் அதை சொல்லித்தான் தப்பிப்பது வழக்கம். ஆனால் எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தால் எதைச் சொல்லி தப்பிப்பது? மாப்பிள்ளை வீடென்றால் கொஞ்சம் குறைச்சலாக விசாரிப்பார்கள் என்று நினைத்த பாட்டப்பன், 'மாப்பிள்ளைக்குச் சொந்தம்" என்றான்.

'யாரோட மாப்பிள்ளைக்கு சொந்தம்?" எகத்தாளமாய் கேட்டார்கள் எல்லோரும்.

'இதென்ன கேள்வி? கல்யாண மாப்பிள்ளைக்குத்தான்?" பாட்டப்பன் தெளிவாகச் சொன்னான்.

'யாருக்கு கல்யாணம்?" ஒரு இரட்டைக் கண்ணன் கேவலமாயக்; கேட்டான்.

'என்னய்யா நீ லூசு மாதிரி பேசற. பொண்ணு மாப்பிள்ளைக்குதானே இங்க கல்யாணம் நடக்கும். உனக்கும் எனக்குமா நடக்கும்?"

'யாருடா லூசு. வளைகாப்பு நடக்கிற எடத்துக்கு வந்து கல்யாணத்துக்கு வந்ததா சொல்லற நீ லூசா நான் லூசா?" கேட்டபடியே கொத்தாக பாட்டப்பன் சட்டையை பிடித்தான் ஒருத்தன். கடவுளே! கல்யாண மண்டபத்தில கல்யாணம் மட்டும்தான் நடக்கும்னு நினைச்சது எத்தனை பெரிய தப்பு. இதுக்கு பதிலா, திருநீரை அழிச்சிட்டு, சாகுல் அமீது கல்யாணத்துக்கே போயிருக்கலாம். பாட்டப்பன் பாதி சாப்பாட்டில் எழுந்து நின்று படுஜோராக விழிக்க ஆரம்பித்தான்.

திருடன்தான் கிடைத்துவிட்டானே! ஒருத்தன், 'போலீஸ் போலீஸ்" என்று கத்தினான். அதைவிட சத்தமாக இன்னொருத்தன் 'ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ்" என்று கத்தினான். திருடனை பிடிக்க ஆம்புலன்ஸ் எதுக்காம்? உயிர் போகிறபடி அடிக்க முடிவு செய்துவிட்டார்களா? ஆம்புலன்ஸ் கூப்பிட்டவனை வெடவெடப்போடு பார்த்தான் பாட்டப்பன். நகையை பறிகொடுத்த பெண் லட்டு லட்டாய் வாந்தி எடுத்துவிட்டு மயங்கி தரையில் விழுந்த பிறகுதான் ஆம்புலன்ஸ் எதற்கு என்று புரிந்தது பாட்டப்பனுக்கு.

பாட்டப்பனை விட்டு எல்லோரும் மயங்கிய பெண் பக்கம் ஓடினார்கள். தப்பி ஒடிவிட முடிவெடுத்தான் பாட்டப்பன். ஆனால் ஒரே சட்டையை மூன்று பேர் கொத்தாக பிடித்திருந்தால் எப்படி ஓடுவது. ஒருத்தன் புத்திசாலித்தனமாய் தாடியை வேறு பிடித்திருந்தான்.

'நகையை குடுத்துடுடா! உன்னால ஒரு உசிர் போயிடும் போல இருக்கே?" கதறியபடி வந்தாள் ஒரு கிழவி. பாட்டப்பனுக்கு பேஜாராகிவிட்டது. பாட்டப்பன் நகை திருட வந்தவனில்லை. அவன் திருடவும் இல்லை. அப்பாவி ஏழை ஒருத்தனை திருடன் என்று தீhப்பு சொல்லி இவர்கள் அடித்தால், கொழுத்த பணக்காரன் நகையோடு தப்பிவிடுவது நிச்சயம். அதை சொன்னால் யார் நம்புவார்கள். எடுக்கவில்லை என்றாலும் நம்பமாட்டார்கள். சோதித்து பார்த்து நகை இல்லை என்றாலும் நம்ப மாட்டார்கள். கூட்டாளி எங்கே என்பார்கள். அவன் தப்பிவிட்டான் என்பார்கள். விதியே என்று பாட்டப்பன் தலையில் கை வைத்த வேளையில்தான் விதி நல்லவிதமாக வேஷம் கட்டிக்கொண்டு வந்தது.

'அய்யைய்யோ... நகை என்கிட்டதான் இருக்கு அதுக்கு எதுக்கு இத்தனை பெரிய கூட்டம் சேத்துகிட்டு" சொன்னபடி வந்தவன் நகை பறிபோனவள் புருசனாம். அவள்தான் முகம் கழுவும்போது கழற்றிக்கொடுத்துவிட்டு பிறகு மறந்துவிட்டாளாம். ஆக நகை திருடுபோகவில்லை. ஒரே கணத்தில் எல்லோரும் நல்லவர்கள் ஆனார்கள். பாட்டப்பனும் நல்லவன் ஆனான். வீட்டுக்கு ஓடிவிடலாம் என்று நான்கு எட்டு வீசி நடந்தான். சந்தேகப் பிசாசுகள் அவனை விடுவதாய் இல்லை.

'ஏய் இரு இரு. வளைகாப்புக்கு வந்துட்டு கல்யாணத்துக்கு வந்தேன்னு சொல்லறீயே அப்ப நீ யாரு? இதுவரையில நீ திருடன் இல்ல. அப்ப இனிமேதான் திருடப்போறீயா?" விவரமாகக் கேட்டான் ஒருத்தன்.

பெரிய மனிதன் போல இருந்த ஒருத்தர் எல்லோரையும் அடக்கினார், 'ஏய் விடுங்கடா அவன. மண்டபத்தில ஒறவு இல்லாத ஒருத்தன் ஒண்ணு பொருள் எடுக்க வருவான். இல்ல சாப்பிட வருவான். பசின்னு சாப்பிட வந்தவனை பாதி பந்தியில எழுப்பறது பாவம். நீங்க சாப்பிடுங்க, சார்" சொன்ன அவர் பாட்டப்பனை உட்காரவைத்து சோறும் பறிமாறினார்.

பாட்டப்பன் பசியோடு இருப்பவன்தான். ஆனால் என்றைக்கும் திருடன் என்று பெயர் எடுக்காதவன். அவனால் சாப்பிடவே முடியவில்லை. ஆயிரம் பேர் உற்று பார்த்துக்கொண்டிருக்கும்போது சர்க்கஸில் இருக்கிற குரங்கு வேண்டுமானால் வாழைப்பழம் தின்னும். பாட்டப்பனால் அது முடியாது. பார்வை குறைந்ததும் அவன் சாப்பிடாமலே எழுந்துகொண்டான். எல்லாம் கண்ணம்மா என்கிற திமிர்பிடித்த சிறுக்கியை காதலித்ததால் வந்தது. சம்சாரி ஆகவேண்டும் என்று ஒருத்தன் முடிவெடுத்தால் செய்யக்கூடாததை செய்து படக்கூடாத அவமானம் படவேண்டிவரும் என்பது உண்மைதான்.

கண்ணம்மாவை முதன் முதலில் பார்த்தபோதே டவுசர் ஆகிவிட்டான் பாட்டப்பன். சுழற்றிவிட்ட பம்பரத்தின் சுறுசுறுப்பில் அவள் உடம்பு இருந்தது. சண்டைக் குருவியின் படபடப்பில் அவள் பேச்சு இருந்தது. அவளிடம் தனக்கு பிடித்த எதோ இருக்கிறது என்று தெரிந்தபிறகு தன் வைராக்கியத்தை கைவிட்டு கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தான் பாட்டப்பன். அவள் போகும்போது வரும்போது விடாமல் பார்த்தான். கண்ணம்மாவும் பார்க்கிறாள் என்பதை புரிந்துகொண்டான். பிறகு தைரியமாக அவளிடம் சென்று, 'என்ன நீ கல்யாணம் கட்டிப்பியா, கண்ணம்மா?" என்று கேட்டான்.

'என் அப்பன் கசாப்பு கடை வெச்சிருக்கிறது உனக்கு தெரியும்தானே? ஆட்டுக்கு தோல் உரிச்சிட்டு மொதல்ல என் அப்பன் எதை அறுப்பான்னு தெரிஞ்சா நீ இப்படி கேட்டிருக்க மாட்டே"

'எந்த மாமனாரும் தன் மருமகனுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யமாட்டாருங்கற தைரியத்திலதான் கேக்கிறேன். உன் பதில் என்ன சொல்லு."

'கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு கேக்க ஒரு மொகறை வேணாம்? ஒரு லட்சணம் வேணாம்? சோம்பேறிப் பய புள்ளை உனக்கு எதுக்கு கல்யாணம்?"

'கை நீட்டி காசு சம்பாதிக்கிறவன் நானு?" தன் பெருமை சொன்னான் பாட்டப்பன்.

'! பிச்சைக்காரன்னு தெளிவா சொல்லு. கோயில்ல துண்டு விரிச்சி, நாலு பேத்துகிட்ட பிச்சை எடுத்து வயிறு வளக்கிறவன் நீ. உன்கிட்ட உடுத்த நல்ல துணி இருக்கா? ஒரு வீடிருக்கா? மூணுவேளை திங்க சாப்பாடு இருக்கா? செருப்பு போட வக்கில்லாத உனக்கு கல்யாணம் ஒரு கேடா?"

'! செருப்பு போட எனக்கா வக்கில்ல? பூமாதேவி கோச்சிப்பான்னுதான் நான் செருப்பு போடறதில்ல."

'ஆமா, துர்காதேவி கோவிச்சுப்பான்னு துணி போடாம இருக்கிறது தானே?"

'ரொம்ப பேசாத கண்ணம்மா. நீ மட்டும் என்ன எம்எல்ஏ மகளா? உங்கப்பன் ஆட்டு தோல் உரிக்கிறவன். நீ காயிதம் பொறுக்கி காசு சேக்கிற சிறுக்கி..."

காகிதம் பொறுக்கும் சிறுக்கி என்றதும் கண்ணம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது. அதுவரை சரிக்கு சரி வாயாடிக்கொண்டிருந்தவள் சட்டென்று வார்த்தை நிறுத்திவிட்டு, காகிதச் சாக்குப்பையை தோளில் போட்டுக்கொண்டு  வெடுக் வெடுக்கென்று நடையைக்கட்டினாள்பாட்டப்பனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. காகிதம் பொறுக்குவதை கேவலமாக நினைக்கவில்லை பாட்டப்பன். இரண்டுபேருமே ஏழைக் கடவுள் பெற்ற பிள்ளைகள் என்றுதான் சொல்ல நினைத்தான். தப்பர்த்தம் ஆகிவிட்டது. உன் தொழில் தெய்வத்திற்குச் சமம் என்பதை குப்பை பொறுக்கியாவது அவளுக்கு நிரூபிக்கவேண்டும் என்று நினைத்த பாட்டப்பன் பிச்சை எடுப்பதை ஒத்திவைத்துவிட்டு தானும் ஒரு சாக்குப் பையை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் சுற்றிச் சுற்றி காகிதம் பொறுக்க ஆரம்பித்தான்.

'இதா... எதுக்கு இப்படி என்னை சுத்திகிட்டு இருக்கே?"

'உன்ன மாதிரி உன் புருசனும் காகிதம் பொறுக்கி உழைச்சி திங்கப்போறான். "

'என் புருசனா? அட கெரகத்தே! செருப்பு போட வக்கில்லாத பிச்சைக்காரன்னு மொதவே சொல்லிட்டனே. மொத ஒரு செருப்பை சாம்பாதிச்சிகிட்டு வா. பிறகு புருசன், அரசன்னு பேசலாம்." விரட்டிவிட்டாள் கண்ணம்மா.

பாட்டப்பனால் ஒரு செருப்பு வாங்க முடியாதா? “இரண்டு ஜோடி செருப்பு வாங்கியாறேன் கண்ணம்மா. உனக்கு ஒண்ணு. எனக்கு ஒண்ணு. கல்யாணச் செருப்புசவடால் விட்டு, சாம்பாதித்த காசு எல்லாம் எடுத்துக்கொண்டு செருப்பு கடைக்கு போனான் பாட்டப்பன். கடைக்காரன் பாட்டப்பனின் காலைப் பார்த்துவிட்டு, 'அடேங்கப்பா! ஒரு முழு எருமைய சேதாரமில்லாம தோல் உரிச்சி செருப்பு தெச்சாத்தான் உன் காலுக்கு போட முடியும். நீ செருப்பு தெக்கிற கடைக்கு போயிடு" என்று துரத்திவிட்டான்.

செருப்பு தைக்கிறவன் சிங்கத்து தோல் எடுத்து செருப்பு தைப்பவன்போல முகறையை வைத்துக்கொண்டு, ஒரு ஜதை செருப்பு நாநூறு ரூபாய் ஆகும் என்றான். இத்தனை வருடப் பிச்சைக்காரப் பிழைப்பில் மிச்சம் பிடித்து வைத்திருந்த இருபத்தி ஏழு ரூபாயை எண்பத்தெட்டு முறை எண்ணிப்பார்த்த பாட்டப்பன்கண்ணம்மா! நீ சொன்னது சரிதான்டீ... செருப்பு போட வக்கத்த நாயீ நான்.” என்று புலம்பினான். செருப்பில்லை என்பதற்காக நடக்காமல் போய்விடுவமா ஒரு கல்யாணம். அதற்காகத்தான் ஒரு பெரிய திட்டம் போட்டான் பாட்டப்பன். கல்யாணமண்டபத்திற்கு போய் மூக்கு பிடிக்க தின்று கால் அகலத்திற்கு செருப்பை போட்டுக்கொண்டுவந்துவிடவேண்டும். வந்தான். தின்றது சவுகரியம்தான். பட்டதுதான் அசிங்கம்.

வளைகாப்பு மண்டபம் மீண்டும் ஆரவாரத்திற்கு வந்திருந்தது. பாட்டப்பனை மறந்திருந்தார்கள். மண்டப வாசலுக்கு வந்தான். ஜோடி ஜோடியாய் செருப்பு இருக்குமே... எடுக்காமல் போவதா எடுத்துக்கொண்டு போவதா? சாப்பாடு போட்ட நல்லவர்கள் செருப்பை திருடவேண்டுமா? முன் பின் குழப்பமாய் இருந்தது பாட்டப்பனுக்கு. நல்லவன் என்று சொன்னதற்காக ஒருத்தன் நல்லவனாகவே இருக்க முடியுமா? செருப்பை கண்ணம்மா என்ற காதல் சிறுக்கிக்காக திருடியேவிடுவது என்று முடிவெடுத்தபோதுதான் நெஞ்சு வெடிக்கிறபடி அதிர்ச்சி வந்தது பாட்டப்பனுக்கு. அங்கிருந்த எல்லோருமே தங்கள் செருப்பை தங்கள் காலிலேயே போட்டிருந்தார்கள். செருப்புக் காலோடு மண்டபத்திற்குள் போலாம் என்று சொல்லிக்கொடுத்த அவர்களின் அம்மாக்களை கண்டபடிக்கு திட்ட ஆரம்பித்தான் பாட்டப்பன். இனி எங்கே போய் திருடுவான் செருப்பை?

நாதஸ்வரம் சத்தம் கேட்ட பக்கம் பாட்டப்பனுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. சிமெண்ட் மேடை மீது ஜமுக்காளம் விரித்து தவில் வாசித்துக்கொண்டிருந்தவர்கள் செருப்பை மேடைக்கு கீழே விட்டிருந்தார்கள். அவன் சந்தோசமாய் அங்கே போனான். இரண்டு நாதஸ்வரம், இரண்டு தவில், ஒரு ஸ்ருதி பெட்டி, ஒரு ச்சைங், சப் என்று மொத்தம் ஆறு பேர் மேடையில் இருந்தார்கள். கீழே இருந்தது ஏழு ஜோடி செருப்பு. நான்கு செருப்பு போடுகிற நாலுகால் ஆசாமி யாராக இருக்குமென்று தவில் கோஷ்டியில் தேட அவகாசமில்லை பாட்டப்பனுக்கு. தன் காலுக்கு சரியாக இருக்கிற செருப்பை போட்டுக்கொண்டான். தன்னுடைய செருப்பு களவு போவது கூட தெரியாமல் ரசித்து நாதஸ்வரம் வாசித்தவர்களை பரிதாபமாக அவன் பார்த்தான். இசை, கலை, ரசனை என்று சில விசயங்களில் மனசை பறிகொடுத்தால் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதை இழந்துவிடுவோமென்று அவர்கள் புரிந்துகொள்ளட்டுமென்று அவன் மண்டபத்திற்கு வேளியே வந்தான்.

ஆடாகவோ, மாடாகவோ பிறக்காமல் ஒரு மனுசனாக பிறந்ததற்காக முதல் முறையாக சந்தோஷப்பட்டான் பாட்டப்பன். ஒரு மாடு தன் காதலுக்காக என்றைக்குமே செருப்பை திருடியிருக்காது. அடுத்த தெருவுக்கு வந்து கடையில் பீடி வாங்கி கம்பீரமாக புகைத்துக்கொண்டே காலில் செருப்பில்லாமல் வருகிற சம்சாரிகளை அவன் கேவலமாகப் பார்க்க ஆரம்பித்தான். அப்பொழுது ஒரு கிழவன் செருப்பில்லாமல் வந்ததையும், வெறும் காலில் அவன் சிகரெட் நெருப்பை மிதித்து வேதனையோடு துடித்ததையும் கண்டான். சிகரெட் நெருப்பின் சூடு எத்தனை கொடுமையானது என்பது காலில் செருப்பில்லாமல் நடந்தவர்களுக்குத்தான் தெரியும். பாட்டப்பன் காரியத் திருடன் இல்லை. அப்பாவித் திருடன். அதவும் குய்யென்று ஒரு நாய் பசியில் கத்தினாலும் இருக்கிற மொத்த சோற்றையும் அதற்கு கொட்டிவிடுகிற கேணைக் கிறுக்கன். சிகரெட் நெருப்பை மிதித்து ஒரு கிழவன் துடிக்கிறான் என்று தெரிந்ததும் ஓடினான் பாட்டப்பன். கிழவன் முன்பாக செருப்பை கழற்றி விட்டு, 'இதை போட்டுக்கோ பெரிசு" என்றான்.

அடப்பாவமே! கண்ணம்மாவின் காதல் என்னாவது? அவன் மனசுக்குள் பசுமாடொன்று கத்தியது. பாட்டப்பனுக்கு தெரியாத சூதா? பாட்டப்பன் தந்திரக்கார நடிகன். பாட்டப்பன் செருப்பு போட்டுக்கொண்டிருப்பதையும், அவன் ஒரு கிழவனுக்கு அதை தானமாக தருவதையும் கண்ணம்மா தூரத்தில் காகிதம் பொறுக்கியபடி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். அதை பார்த்தும் பார்க்காதவன் போலத்தான் பாட்டப்பன் அப்படி செய்கிறான். ஆனால் நாமே நடத்துகிற நாடகத்தில் கண்டவனும் போனவனும் கண்ணாபின்னாவென்றுதானே நடிப்பார்கள். பாட்டப்பன் செருப்பைக் கொடுக்க, அந்தக் கிழவனோ செருப்பை தானம் வாங்குவதில்லை என்ற பாட்டியிடம் சத்தியம் செய்தவன் போல முறைத்துக்கொண்டு நின்றான். பிறகு பாட்டப்பன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். சோகத் திரைப்படம் பார்க்கத்தெரியாதவர்கள் அழுகைக் காட்சியில்தான் சிரிப்பார்கள். கிழவன் விட்ட அறைச் சத்தத்தைவிட பெரும் சத்தத்pல் கண்ணம்மா சிரிக்க ஆரம்பித்தாள். ஒரே நேரத்தில் இன்பமும் துன்பமும் வந்ததில் குழம்பிப்போனான் பாட்டப்பன்.

'ஏன்டா, என்னோட செருப்பையே திருடிகிட்டு வந்து எனக்கே தருமம் செய்யறீயா நீ. உன்னால பாருடா வெறுங்கால்ல வந்து நெருப்பை மிதிச்சேன்."

'செருப்பு உன்னோடதா பெரிசு. அப்ப நீ நாயணக்காரனா?"

திபீரென்று இன்னொரு அடி விழுந்தது பாட்டப்பனுக்கு. 'ஏன்டா, அரசனட்டி நாட்டாமை என்னப்பாத்து நீ நாயணக்காரன்னா கேக்கறே!" நாட்டாமை ஊர் கூட்டி பஞ்சாயத்துக்கு கத்த ஆரம்பித்துவிட்டான். அப்பொழுது தப்பித்தாலும் தருமப்படி மீண்டும் திருடனாகிவிட்டான் பாட்டப்பன். 'தருமம் வாழ்க!" என்று சொல்லிக்கொண்டே அவன் தரும அடிக்கு தயாரானான்.

இந்த தருமம் நியாயம் சத்தியம் எல்லாம் ஊமைகளிடம்தான் தன் வேலையைக் காட்டும். வாயுள்ளவர்களைக் கண்டால் தருமம் என்பது ரத்த வாந்தி எடுத்துவிடுகிறது. பாட்டப்பன் ஒப்புக்கொண்டதால் அவன் செருப்பு களவானிதான். ஆனால் கண்ணம்மா அதை ஒப்புக்கொள்ளாவிட்டால் தருமம் கால் கிளப்பிக்கொள்ளும். வேடிக்கை பார்த்த கண்ணம்மா காகித சாக்கை போட்டுவிட்டு ஓடிவந்து அந்த நாட்டாமைக் கிழவனை வாங்கு வாங்கு என்று வாங்கினாள், 'ஏய்யா கெழட்டு முண்டம். நீ செருப்பை கேணையனாட்டம் எங்கியோ விட்டுட்டு வந்து இங்க நாந்தான் நாட்டாமைன்னு சொல்லுவே! அதை இந்த மகராசன் கொண்டாந்து குடுத்தா அடிப்பியா நீ? அறிவு கெட்டவனே... இப்படியே நெலவரமில்லாம போகாத பஸ்சுன்னு நெனைச்சி த்ரோவா பாடையில ஏறிடுவே..." என்று அவள் போட்ட கூச்சலில் நாட்டாமைக் கிழவன் ஆடிப்போனான். ஆளை விட்டால் போதுமென்று செருப்பை காலில் போட்டுக்கொண்டு ஓடிப்போனான். மீண்டும் பாட்டப்பன் யோக்கியனாக மாறிவிட்டான்.

'எவன் அடிச்சாலும் மொகறைய காட்டிக்கிட்டு நிக்கிறியே கேணப்பயலே! வெக்கமாயில்லே" அடுத்து பாட்டப்பன் மீது பட்டாசு விட்டாள் கண்ணம்மா.

'நீதானே செருப்பு போட வக்கில்லாத பிச்சைக்காரனை கட்டிக்க மாட்டேன்னு சொன்னே"

'அதுக்காக? செருப்பு போட்டவன் பின்னாடியே போக பொண்ணு என்ன குதிரை லாடமா? நீ ஒழுக்கமா ஒரு காசு சம்பாதிக்கணுன்னுதான் நான் அப்படி சொன்னேன். நீ செருப்புத் திருடனா வந்து நிக்கறே! அடி உதைக்கு பயப்படாம திருடப்போற நீ வேர்வை வெயிலுக்கு பயப்படாம உழைக்க மாட்டியா? நீயெல்லாம் ஒரு மனுசன்தானே... உனக்கு உடம்புல சூடு சொறணை இருக்குதானே... வாயால திங்கற மனுசன் உடம்பால உழைக்கணுன்னு உனக்கு எந்த பொறம்போக்கும் சொல்லித் தரலையா? வாய்யா, என் பின்னாடி வா... குப்பை பொறுக்கிற சேவலுக்கு எட்டு பெட்டைக் கோழி இருக்கு பாரு! எதனால... கம்பீரம் வேணும்யா... குப்பையக் கிளறியாவது பொட்டச்சிய மயக்கற கம்பீரம் வேணும். இருக்கா? உனக்கு இருக்கா..." கண்ணம்மா ஓயாத அறிவை சொல்லி பாட்டப்பனின் செவிட்டில் ஈரம் காயாமல் அடித்துக்கொண்டே இருந்தாள்.

எட்டு வயதில் அனாதையாகி, பதினாறு வயதுவரை சித்தப்பன் வீட்டு தண்டச்சோறு தின்று, இன்றுவரை அரைச் சாமியாராக பிச்சை எடுத்து, மானத்தோடு வாழ்ந்துவரும் பாட்டப்பனைப் பார்த்து தெருநாய் குழைத்தாலும் சரி அதன் மண்டை மேல் கல் போட்டு கொன்றுவிடுவான். ஆனால் கண்ணம்மாளின் அறிவு இன்று அவனுக்கு தித்திக்க ஆரம்பித்தது. புண் வந்த முதுகு, வண்டல் படிந்த பாதம், நாற்றக்கறை பிடித்த பற்கள், பரட்டைத் தலை, யாசிக்கிற கைகள், பிச்சைக் குரல் எழுப்பும் வாய் என்று சீரழியத் தயாராக இருந்த தன் முதுமையை திசை திருப்பி, குப்பைக்குள் ரத்தினம் தேடுவது போல காகிதங்கள் தேடவைத்து குடும்பஸ்தனாகப்போகும் எதிர்காலத்திற்கு இட்டுச் செல்லும் கண்ணம்மாவின் கட்டளை வசவுகளையும், அதை மந்திரம் போல உச்சரிக்கிற அவளின் சிவந்த வாயழகையும் கண் இமைக்காமல், பாவென்று வாய் பிளந்து பார்த்தபடி நின்றிருந்தான் பாட்டப்பன். முரட்டுச் செருப்பணிந்தபடி சண்டைக்கார கறுப்பியின் பாதங்களுக்குப் பின்னால் ஒரு குப்பைச் சேவலாக மாறி தத்திச் செல்வது போன்ற பிரம்மை வந்தது அவனுக்கு.

நான் சேவலா மாறி குப்பைய கிளறினா நீ என்னை அறுத்து குழம்பு வெச்சிட மாட்டியே?”


பாட்டப்பன் கேட்க, பயந்த கிறுக்கனின் கேள்வியில் திகைத்த கண்ணம்மா வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஓவென்று சிரித்தாள். அவள் சிரித்த சிரிப்பில் சில குழந்தைகளின் முகம் தெரிந்து மறைந்தது பாட்டப்பனுக்கு. அது பாட்டப்பனின் சாயல் கொண்ட குழந்தைகள்.
முற்றும்