-------------------------------------------------------------------------------------------------------------------------
காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி; காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி!வீணாகப் புலம்பினதா லறியப் போமோ? விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்!கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக் குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்துநாணாம லொருநினைவாய்க் காக்கும் பொது, நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே!
- அகத்தியர்
பிறப்பிலிருந்து இறக்கும் வரை உயிர்கள் ஏதாவதொன்றை தினம் தேடிக்கொண்டே இருக்கிறது.
ஒரு தாயின் வயிற்றில் மனித ரூபமாய் பிறக்கிற எல்லோரும் முதலில் அம்மையின்
கதகதப்பைத் தேடுகிறார்கள். அன்றிலிருந்து வாழும் காலம் முழுவதற்கும் ஏதாவது ஒன்றை
தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். உண்பதற்கு உணவை,
உடுத்த உடையை, நிம்மதியை, புரியாத வாழ்க்கையை, பாலைவனச் சந்தோசத்தை, அகங்காரம் தரும் பதவியை, நிறைவு தராத பணத்தை, சுயநலமிக்க புத்தியை, சொப்பனத்தில் மிதக்கும் முக்தியை, கிட்டாத ஞானத்தை, தள்ளாடவைக்கும் புகழை, கைக்கு எட்டாத கனவை, ஓட்டைக் காலணாவை, உடைந்த உறவை, மனைவியை, பிள்ளையை, ஆடம்பரத்தை, அலங்காரத்தை, அங்கீகாரத்தை, பறவையின் சங்கீதத்தை, தனக்கான கண்ணீரை, பாசத்தை, அன்பை, அழுகையை... இப்படி ஏதாவது
ஒன்றை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்களின் உயிரியக்க ஆதாரம் தேடல்தான்.
மனிதர்கள் தேடி அலைகிற சாபம் பெற்றவர்கள்.
அவுரங்காபாத்தில் இருந்த ஒரு
செல்வந்தர் இப்படித்தான் ஒருமுறை தொலைந்துபோன ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். அவர்
தேடிக்கொண்டிருந்தது ஒரு குதிரையை! பணம்படைத்த மனித மனத்திற்கு சின்னதாய் ஒரு
குணக் கோளாறு உண்டு. மனிதனைக் காட்டிலும் மனிதனின் மிதியடியே மதிப்பு மிக்கது
என்று. அது நம்பிக்கொண்டிருக்கும்
ஊரில் அவரது மனைவி மக்களும், உறவுக்காரர்களும் இவரைக்
காணோமென்று தேடிக்கொண்டிருப்பார்கள். இவரோ நாள் கணக்கில் தொலைந்துபோன தன் குதிரையை
தேடிக்கொண்டிருந்தார். மனைவி மக்களைவிட தொலைந்துபோன அவரின் குதிரை விலைமதிக்க
முடியாத ஒன்றாய் அப்போதைக்கு அவருக்கு தோன்றியிருக்கலாம்.