Sunday, August 14, 2016

உப்புக் கப்பல் - சிறுகதை


ஆகாஷ், தூக்க மாத்திரை நான்கு போட்டுக்கொண்டான். தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகமாக வைத்தான். கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டான். சொரிநாய் போல சிரித்துப் பார்த்தான். பாதியில் நிறுத்தி அழ முயற்சித்தான். பனியன் இல்லாமல் பரத நாட்டியம் ஆடினான். விளக்கை அணைத்துவிட்டு பறக்கிற கொசுக்கள் எத்தனை என்று எண்ணினான். என்ன கோணங்கித் தனம் செய்தாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி ஒன்று அவனை பாடாய் படுத்தியது. 'குடும்பம் என்பதற்கு அர்த்தம் என்ன?" இந்த கேள்விக்கு அவனால் அதிக பட்சமாய் டிவி ரிமோட்டை சுவற்றில் அடித்து உடைக்கத்தான் முடிந்தது.
குடும்பம் என்றால் என்னவென்று மண்புழுவுக்குக் கூட இந்தக் காலத்தில் தெரிந்திருக்கும். ஜீன்ஸ் பேண்டின் ஜிப்பை ரிப்பேராக்காமல் போட்டுக்கொள்கிற அளவுக்கு நாகரீகம் பெற்ற ஆகாஷிற்கு அது தெரியாமல் போய்விடுமா? அவனுக்குத் தெரியும். டவுன் பஸ் வராத காலத்திலேயே பட்டிக்காட்டில் இருந்த  அரசு தொடக்கப் பள்ளியில் பயங்கரமாக படித்து பெயர் எடுத்தவன் ஆகாஷ். தும்மல் வராமல் மூக்குப்பொடி போடுவதில் வல்லவரான வரலாற்று வாத்தியார் சின்ன வயதில் அவனுக்கு குடும்பத்தை பற்றி சொல்லிக்கொடுத்திருக்கிறார். 'எங்க சொல்லு... மனித நாகரீகத்தின்... உச்சபட்ச... ம் சொல்லு... உச்சா போச்சா இல்லேடா... உச்சபட்ச... ம் அதேதான்! கண்டுபிடிப்புதான்.. குடம்பம் என்கிற... அமைப்பூ... ம் வெரி குட். நீ உட்கார். அடுத்தவன் சொல்லு... மனிதன் கண்டுபிடித்த..."
அன்றைக்கு கற்றுக்கொண்ட அந்த கல்விக்கு பதினெட்டு வருடம் கழித்து ஆட்ஷேபம் வரும் என்று ஆகாஷ் எதிர்பார்க்கவில்லை. 'மூக்குப்பொடி போடுகிற அந்த வரலாற்று வாத்தியாரை தூக்கி மைக்ரோ ஓவனில் வையுங்கள். குடும்பமாம் குடும்பம்! என்னைக் கேளுங்கள் நான் சொல்கிறேன். குடும்பம் என்பது குகை மனிதர்களின் உபத்திரவமான கண்டுபிடிப்புபருப்புக் குழம்பிற்குள் குலோப் ஜாமூன் போட்டு குழப்பித் தின்பதைப் போன்ற கூமுட்டைத் தனம்தான் குடும்பம் என்பது. குணத்தால் ஒன்றுபடாத மனிதர்களை ஒரே வீட்டிற்குள் அடைத்து வைத்து, அதை குடும்பம் என்று உலகம் சொன்னால் அதை பைத்தியக்காரத்தனம் என்று ஊரே சொல்லி தனித் தனியாய் வாழவேண்டும். வாழ்க பாரதம். நன்றி! வணக்கம்!" பள்ளிக்கூடத்து சிறுமி வாய்ப்பாடு சொல்வது போல சரசரவென்று சொல்லிவிட்டு முறைத்துப் பார்த்தாள் கீதா பிரியதர்ஷினி
கீதா பிரியதர்ஷினி என்பவள் ஆகாஷின் அழகான மனைவி. இரண்டு குழந்தைக்குத் தாய். ஒரு ஜோடி குழந்தை பெற்றவள் எதற்காக குடும்பம் என்ற விவகாரத்தை கதறக் கதற அழ வைக்கிறாள் என்று கேட்டால்  ஆகாஷிடம் பதில் கிடையாது. கீதா அழகான மட்டுமில்லை அன்பான மனைவியும் கூட. ஏழு வருடம் குற்றமில்லாமல் அவனோடு குடும்பம் நடத்தியவள். அந்த ஏழு வருடத்தில் சின்ன சண்டை வந்தது கிடையாது. எந்த பாத்திரமும் உருண்டது கிடையாது. ஜன்னல் துணியோ, பழைய பனியனோ கிழிந்தது கிடையாது. பாத்ரூம் பக்கெட் உடைந்தது கிடையாது. கண்ணீரோ ஒப்பாரியோ ஒருநாளும் இல்லை. கலர் சாயம் பூசிக்கொண்டு நன்றாக ஆடிப்பாடித்தான் சிரித்தது வாழ்க்கை. ஆனால் சமீப மாதங்களாக கீதா சொல்கிற ஒரே வாசகம் இதுதான்: 'இனிமே என்னால கூட்டுக் குடித்தனம் பண்ண முடியாது மிஸ்டர் ஆகாஷ்! தனிக் குடித்தனம் போயிடுவோம்" அவள் அதை ஆங்கிலத்தில் சொன்னதும் அதிர்ந்து போனான் ஆகாஷ்.

கீதா பட்டிக்காட்டு பத்தாவது படித்தவள். கல்யாணமான புதிதில், 'ரெண்டு பேர் மட்டும் தனியா படுக்க பயமா இருக்குங்க! அத்தை மாமா இருக்கிற இடத்தில தூங்கலாம்." என்று அம்மாஞ்சியாய் சொன்னவள். வீட்டில் தனியாக டிவி பார்க்கவே அச்சப்பட்டவள். டியூப் லைட் வெளிச்சத்தில் பேய் வரும், கரண்ட் கம்பத்து உச்சியில் கடவுள் இருக்கும் என்று நம்பியவள். நடு ராத்திரியில் எழுந்து 'அய்யோ பாட்டி, தாத்தா, அத்தே சித்தப்பா, சித்தி.... எனக்கு பயமா இருக்கு!" என்று கத்திக்கொண்டு புருசனைக் கட்டிக்கொண்டவள். குழந்தை பிறக்க வேண்டி மண் சோறும், சொந்த பந்தம் தழைக்க வேண்டி பிரார்த்தனைகளும் செய்தவள். தலை நரைத்த மனுசர்கள் முதல், மூப்படைந்த மூஞ்சூறு எலி வரை எல்லோர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவள். அந்த கிராமத்துச் சிறுமியின் அறியாமைக்காக வருத்தப்பட்டிருக்கிறான் ஆகாஷ். கற்காலத்து கிறுக்குப் பெண்ணோடு குடும்பம் நடத்துவது போன்ற குழப்பத்தில் அவஸ்த்தை  அனுபவித்திருக்கிறான். அவளுக்கு கொஞ்சம் அறிவு வரட்டுமே என்று அவன்தான் ஆங்கில  பத்திரிக்கை வாங்கி படிக்கத் தந்தான். அவன்தான் எம். வரலாறு படி என்று தபாலில்; சேர்த்து விட்டான். அவன்தான் நூலகத்திற்குப் போய் புத்தியாய் படி என்றான். அங்கேதான் வந்தது வினை.

இரண்டு குழந்தை பிறப்பதற்குள் கீதா பெற்ற ஞானங்கள் ஏராளம். அவள் இன்னவிதமான புத்தகங்கள்தான் படிக்கிறாள் என்று புத்தகம் தின்கிற புழுவிற்கே தெரியாது. தத்துவமும், தர்க்கமும், சரித்திரமும், அறிவியலும் புனைவுகளும், கவிதைகளும் அவளிடம் மண்டியிட்டது. ஆங்கிலம் பேசுவதில் ஆகாஷை பிச்சைக்காரனாக்கினாள். எந்த நூற்றாண்டு பூதம், கிளை நூலகத்தின் எந்தப் புத்தகத்திலிருந்து எழுந்து வந்து அவளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டதோ தெரியாது! அவள் முற்றிலும் அந்நியப் பெண் போன்ற பாவனையோடு பேச ஆரம்பித்தாள். 'ஏங்க, மாமா, கத்திரிக்கா பாயசமும், சேமியா ரசமும் வெக்கட்டுமா?" என்று வெகுளிப் பெண் பயத்தோடு சம்சாரத்தைத் துவக்கிய பட்டிக்காட்டு கீதா இன்றைக்கு, 'பாருங்க மிஸ்டர் ஆகாஷ்... இந்த வுமென் கம்யூனிட்டி விவரமே இல்லாம, வீடு, புருசன், குழந்தை, அழுக்குத் துணி, பழைய சாப்பாடு, கோலம், குத்துவிளக்குன்னு இருந்துட்டாங்க. அந்த பொண்ணுங்களுக்கு வேணும்னா கூட்டுக் குடும்பம் சரிப்பட்டிருக்கலாம்... ஆனா இது நவீன காலம். பொண்ணுங்க சுதந்திரம் ரொம்ப முக்கியம். அதை நீங்க தடுத்தா, மனித உரிமை மீறினதா ஆயிடும்" என்கிறாள். ஆகாஷ் எந்த மனிதனை உரிமை மீறினான்?

அவனுக்கு கீதா மீது கோபம் வரவில்லை. தப்பான புத்தகம் படித்துவிட்டு தப்பாகப் பேசுகிறாள். அறிவு சொல்லி சமாளிக்கலாம் என்று சுமாராக ஆரம்பித்தான். 'கீத்து.. நீ செயற்கையான பிரச்சினைய உருவாக்கிட்டு அதோட சண்டை போடறே! தனிக் குடித்தனம் போறது முட்டாள்தனம். அதுக்கு நான் ஒப்புக்க மாட்டேன்" ஆகாஷிற்கு தெரிந்த மிகப் பெரிய அறிவுரையும் மிரட்டலும் இதுதான். ஆனால் அதற்கு கீதா செய்த பிரசங்கம் இருக்கிறதே... ஒரு நூற்றாண்டுக்கு உட்கார்ந்து கேட்கலாம்.

'வேணாம் ஆகாஷ்! கூட்டுக் குடும்பத்தில நாம பட்ட நஷ்டம் ஏராளம். இனியும் சமைச்சி, தொவைச்சி, வீடு பெறுக்கி பெரிசா கோலம் போட்டு என்னால சாக முடியாது. எனக்கு இப்ப அவசரத் தேவை சுதந்திரம். நான் விரும்பறபோது சிரிக்கணும், தோணற போது ஆடணும்! விரும்பினா சமைக்கவும், இல்லாட்டி பட்டினியா படுக்கவும் சுதந்திரம் வேணும்."

'               குடும்பம்னு வந்தா சிலதை தியாகம் பண்ணித்தான் ஆகணும் கீத்தூ... புருசனுக்காக பொண்டாட்டியும், பொண்டாட்டிக்காக புருசனும் விட்டுத் தரலேன்னா கல்யாணமே உலகத்தில நடக்காது. கல்யாணம்னு ஒரு விசயம் இல்லேன்னா ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவில இருக்கிற சில அந்தரங்கச் சடங்கு நடக்காமயே போயிடும்!"

'இப்ப எதுக்கு ஆகாஷ் அசிங்கமா பேசறீங்க. சரி, நீங்க சொல்லற மாதிரியே வெச்சிப்போம். கல்யாணம் ஒரு நிர்பந்தம். குறிப்பா உடல் சார்ந்த நிர்பந்தம். ஆணுக்கும் பெண்ணுக்கும் அது அவசியம். அதுல சந்தோசமும், சமூகக் கடமையும் இருக்கு. அதை நான் ஒப்புக்கறேன்! ஆனா குழந்தை பொறந்ததும் கடமை முடிஞ்சி போயிடுதே ஆகாஷ். அதுக்கு பிறகும் குகை மனுசன் மாதிரியே மந்தையா, கூட்டம் கூட்டமா ஒண்ணா இருக்கணுன்னு நெனைச்சா தப்பில்லையா?"

'ஊர்ல எல்லோரும் அப்படித்தான் இருக்காங்க கீதா! உலகமே குடும்பம் உறவு பந்தம்னு கொண்டாடிகிட்டு இருக்கு." ஆகாஷ் பொறுக்க மாட்டாமல் தன்னுடைய அறிவாளித் தனத்தையும் காட்ட நினைத்தான். அது செவிடன் காதில் வயலின் வாசித்தது போல அபத்தம் என்று தெரிந்தாலும் முடிந்தவரை குழப்பியடித்து சமாளிக்கலாம் என்றுதான் நினைத்தான். ஆனால் கீதா மிகத் தெளிவாகச் சொன்னாள், 'ஆகாஷ் இதுதான் உங்களோட முடிவுன்னா... என்னை மன்னிச்சிடுங்க. நாம டைவோர்ஸ் பண்ணிக்கிடலாம்"

ஆகாஷ_க்கு பளிச்சென்று புரிந்தது. இது நொறுங்கிய கண்ணாடி. ஒட்டவைத்து அதில் முகம் பார்த்தால் பயங்கரமான உருவம்தான் தெரியும். கீதாவை தர்க்கத்தால் வெல்வது கடினம். ஒரு கிழட்டு நூலகத்தின் அத்தனை அபத்தங்களையும் அவள் படித்திருக்கிறாள். பிரபஞ்ச உற்பத்தி முதல், குவான்டம் தியரி வரை படித்த பெண்ணுக்குள் ஏற்படுகிற ரசாயன மாற்றம் அது. இனி அவளை எப்படி சரி செய்வது? அவளை ரிப்பேர் பார்க்கிற அளவுக்கு அத்தனை பெரிய புத்திசாலி மெக்கானிக்கிற்கு ஆகாஷ் எங்கே போவான். ஜீரணிக்க சிரமமாக இருந்தாலும் தனிக் குடித்தன முடிவிற்கு தயாரானான் ஆகாஷ்.

'சரி கீதா! உன்னோட முடிவை நான் ஏத்துக்கறேன். உனக்கு எப்படியோ தெரியாது... ஆனா எனக்கு ஊர் உலகம், குடும்பம் மனுசங்க இதெல்லாம் தேவையா இருக்கு. எங்க சின்ன தாத்தாவோட கடைசி பேத்திக்கு அடுத்த வாரம் கல்யாணம். அதுவரையில ஒண்ணா இருக்க எனக்காக நீ ஒத்துக்கணும்..."

கீதா சந்தோசத்தில் குதித்தாள். அவளுடைய பல மாதப் போராட்டம் இது. கடைசியில் ஜெயித்தவள் அவள்தான். அவள் குதூகலமாய்ச் சொன்னாள். ' மிஸ்டர் ஆகாஷ். எனக்கும்; அது பிடிக்கும் ஆகாஷ். சின்னத் தாத்தாவோட செலிப்ரேஷனுக்கு நாம போவோம். ஆனா ஆகாஷ், ஒரு கண்டிசன். ஒம்பதாயிரம் பேரை ஒரே குடும்பம்னு நீ திரும்பவும் சொல்லக் கூடாது. ~தனி மனுசன்.. தனி வயிறு!| இந்த தத்துவத்தை ஒப்புக்கணும் நீ!"

ஆகாஷ் சின்னதாய் சிரித்து அதை ஆமோதித்தான். பூதக் கண்ணாடி வழியே பார்த்திருந்தால் அவன் கண்ணில் கண்ணீர் சுரந்ததை கண்டிருக்கலாம். அத்தனை அந்தரங்கமான அழுகை!

சின்ன தாத்தாவின் பேத்தி கல்யாணத்தில் உலகச் சந்தையைப் போல ஒரே கூட்டமாய் இருந்தது. ஆசியாவின் பெரிய குடும்பம் சின்ன தாத்தாவின் குடும்பம். கரும்பு வயலுக்கு நடுவே இருந்த பெரிய கலத்து மேட்டில் கல்யாணம் வைத்திருந்தார். ஆடு வெட்டி அமர்க்களமாய் கல்யாணம் முடிந்த திருப்தியில் சின்ன தாத்தா ஒய்யாரமாய் நடந்துகொண்டிருந்தார். அவரின் தோளிலும், இடுப்பிலும், உச்சந்தலையிலும் ஏராளமான குழந்தைகள் ஏறி மிதித்து விளையாடியபடி அவரோடு வந்தன.

வயிற்று வலி ஆசாமிகள் போல ஒதுங்கி நின்ற ஆகாஷ் கீதாவைப் பார்த்து கத்தினார் தாத்தா, 'டோய் பேரா! சோறு தின்னுட்டியா? அங்க ஏன் நிக்கிறே... இங்க வா! ஆமா கல்யாணம் எப்படி? ஒசத்திதானே!" தோளில் உட்கார்ந்து காது கடுக்கனை கழட்டிய பேத்தியின் கையை மிருதுவாய் முறுக்கியபடி அவர் கேட்டார்.

ஆகாஷ் பதில் சொல்லாமல் வாழை மரத்தில் சாய்ந்து தோரணத்தை பிய்த்தபடி நின்றான். கீதா கொஞ்சம் நேரம் திருதிருவென்று விழித்தாள். பிறகு நிலைமையை சமாளிப்பதற்காக சம்மந்தமே இல்லாமல் பேசினாள். 'மிஸ்டர் சின்ன தாத்தா... இதெல்லாம் உங்களோட குழந்தைங்களா?" தாத்தாவிற்கு வயது எண்பத்தேழு! தோழில் இருந்த பெரிய குழந்தைக்கு வயது மூன்று. சின்ன தாத்தா சிரித்ததில் வாழைமரம் பேயாட்டம் ஆடியது. 'ஆமா! இதெல்லாம் என்னோட புள்ளைங்கதான். என் மூத்த மகனோட பேரனுங்க ரெண்டு... இளையவனது நாலு, மகளோட பேத்தி ஒண்ணு. இதோ, கடைசி பேத்திக்கு கல்யாணம். அதும் ரெண்டு என் தோள்மேல பெத்துப் போடும். குடும்பம்னு வந்தா சொமை சொமக்கத்தான் செய்யணும். அதான் சொகம்"

தாத்தா சொன்னதைக் கேட்டு கீதா ஆகாஷை முறைத்துப் பார்த்தாள். அவளுக்கு காட்சி புரிந்துவிட்டது. அவள் எரிச்சலாகி எரிந்து விழுந்தாள்: 'மிஸ்டர் ஆகாஷ்! இந்த ஷோ காட்டத்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்களா?| என்னை உங்களால சினிமா காண்பிச்சி, வசனம் பேசி மாத்திட முடியாது. புரிஞ்சிக்கங்க"

'மருமக என்ன சொல்லுது ஆகாசு? குடும்பத்தில என்னமோ வில்லங்கமாட்டும் இருக்கு!"

'என் சம்சாரம் தனிக் குடித்தனம் போகணுன்னு சொல்லறா!" சட்டென்று போட்டு உடைத்தான் ஆகாஷ்.

தன் தலைமீது கொண்டாட்டம் போட்ட பிள்ளைகளை துரத்திவிட்டு ஆகாஷை அனுசரணையாய் பார்த்;தார் தாத்தா. பிறகு கீதாவை பார்த்து சிரித்தபடி, பெரிய மனுச தோரணையில் பேச வாயெடுத்தார். தாத்தாவை கை காட்டி நிறுத்தினாள் கீதா. 'பாருங்க மிஸ்டர் தாத்தா! நீங்க பட்டிக்காட்டு ஆசாமிங்க. யூரியா பையிலையே ஒன்பது பேரு குடும்பம் நடத்துவீங்க. எங்க நகரத்தோட நாகரீகம், அந்த வாழ்க்கை முறை உங்களுக்குத் தெரியாது. நாட்டாமையாட்டம் தீர்ப்பு சொல்ல வராதீங்க..."

'அடேங்கப்பா...!" என்று வாய் பிளந்தார் தாத்தா. பிறகு பெரிதாய் சத்தம் வராமல் சிரித்தபடி பேசினார். 'அவசரப் படாத தாயீ! நான் உனக்கு சப்போர்ட்டாத்தான் பேசப்போறேன். நான் பட்டிக்காட்டு ஆளுதான்னாலும் இந்தக்காலத்து புத்தியும் எனக்கு உண்டு. நீ சொல்லறதுதான் சரி. யூரியா பையில ஒன்பது பேரு குடும்பம் நடத்தக் கூடாது. பிடிக்கலேன்னு ஆயிட்டா மனுசன் தனித்தனியா போயிடுணும். புண்ணை மூடி மூடி வெச்சா அது சீழ் பிடிச்சி நாறிடும். உனக்கு மாமியார் மாமனார் பிடிக்கலேன்னா வெட்டி விட வேண்டியதுதான். குடும்பத்தில சிக்கல் கூடாது. அதான் முக்கியம். இப்பவே உன் மாமியார் மாமனார் ரெண்டு பேரையும் இங்க ஊருக்கு அனுப்பி வெச்சிடு" சின்ன தாத்தா பொறுப்பான ஆளாக தீர்ப்புச் சொன்னார்.

வாழை மரத்தில் சாய்ந்து நின்ற ஆகாஷ் தலையில் அடித்துக்கொண்டான். 'அவங்க முதியோர் இல்லத்துக்கு போயி நாலு வருசம் ஆச்சி." வானம் பார்த்தபடி யாரிடமோ பேசினான்.

பறக்கிற தும்பியை பார்க்கிறவர் போல மாறி மாறி கீதாவையும், ஆகாஷையும் பார்த்து குழம்பி நின்றார் தாத்தா. 'அவங்க உங்களோட இல்லையா? அப்புறும் எதைக் கூட்டுக் குடும்பம்னு சொல்லுது இந்த பொண்ணு?" ஆகாஷிடம் புரியாமல் கேட்டார்.

'அந்த கெரகத்தை அவளே சொல்லுவா. கேட்டுக்கங்க" ஆகாஷ் திரும்பி நின்றபடி வயலில் நின்ற கொக்குகளை எண்ண ஆரம்பித்தான்.

'நான் சொல்லறேன் மிஸ்டர் சின்ன தாத்தா! நான், என் புருசன், ரெண்டு குழந்தைங்க எல்லாம் ஒண்ணாத்தான் இருக்கோம். அது கூட்டுக் குடும்பம்தானே!" வயதான தாத்தாவுக்கு விளங்கும்படி உரக்கவே சொன்னாள் கீதா.

தாத்தா, தன் முடி எல்லாம் உதிர்ந்து விடுவது போல தலையை சொறிந்துகொண்டார். 'அடக் கடவுளே! இப்பெல்லாம் புருசனும் பொண்டாட்டியும்; சேந்து இருக்கிறதையே கூட்டுக் குடும்பம்னு சொல்லிக்கிறீங்களா! நீ சொன்னது நெசந்தான் தாயீ... இந்த கிழவனுக்கு அவ்ளோ வௌரம் பத்தாது." நம்பவே முடியாமல் ஆகாஷைப் பார்த்தார், 'ஏன் ஆகாசு! புருசன் பொண்டாட்டி சேந்திருந்தாவே அது கூட்டுக் குடும்பம்னு நீயும் ஒத்துக்கிறீயா!"

'ஏன் நான்தான் சட்டம் எழுதறவனா? நான் ஒத்துகிட்டாத்தான் ஆச்சா!" ஆகாஷ் பறக்கிற கொக்கை பார்த்துக்கொண்டே கேட்டான். தாத்தாவுக்கு இது சிறுபிள்ளைகள் விளையாட்டு என்றுதான் நினைப்பு ஓடியது. 'ஏந்தாயி, புள்ளைங்க ஒரு பக்கம், புருசன் ஒரு பக்கம், நீ ஒரு பக்கம்... தனித் தனியா இருக்கணும். அதான் தனிக் குடித்தனம்னு நீ சொல்றே! அப்படி பண்ணா புள்ளைங்க வீதியில பிச்சை எடுப்பாங்களே தாயீ! அது சரிப்பட்டு வருமா?" தாத்தா சிரிப்பாகத்தான் இதைக் கேட்டார்.

'பாருங்க மிஸ்டர் தாத்தா! பட்டிக்காட்டு ஆசாமிக்கு புரியாத உலகம் ஒண்ணு இருக்கு. நவீன காலத்துல முதியோர் இல்லம் உண்டு, குழந்தைங்க காப்பகம் உண்டு, ஆஸ்பிடல் உண்டு. ஓட்டல் உண்டு. இன்சூரன்ஸ் உண்டு. தனித் தனியா வீடுகள் உண்டு. எல்லாத்துக்கும் நவீன ஏற்பாடு உண்டு... அப்பாவும் அம்மாவும் இல்லாமையே குழந்தை பிறக்கிறதுக்கு ஏற்பாடும் உண்டு. அந்த குழந்தைகளும் வளரத்தான் போகுது. அதுக்கு ஏது கூட்டும் பொரியலும் குடும்பமும்." கீதா பொரிந்து தள்ளினாள்.

'குடும்பத்தில ஒரு சந்தோசம் இருக்கு தாயீ. அதை வேணாம்னு சொல்லலாமா?"

'அது பித்தலாட்டம் மிஸ்டர் தாத்தா! கோடை மழையில குட்டியூண்டு தெரியிற வானவில் மாதிரிதான் குடும்பம் தர்ற சந்தோசம். இந்த அற்ப சந்தோசத்துக்காகத்தான் குடும்பத்த கொண்டாடறாங்க. மழைய கொண்டாடறாங்க! கோடை மழையால சேறும் சகதியும்தான் அதிகம். ஜலதோசம் பிடிச்சி அவதிப்பட்டுகிட்டு, சேத்துல நடக்க முடியாம பாத்ரூம் செருப்பை கையில தூக்கிகிட்டு நடக்கிறாங்க ஜனங்க. அவங்க மழைய கொண்டாடினா என்னால சிரிப்பை அடக்க முடியாது. ஒரே ஜூஸ் பாட்டில்ல ஏழு வாய் வெச்சி குடிக்கிறது, ஒரே ஆப்பிளை எட்டா வெட்டி திங்கறது, அலுமினியத் தட்டுல பத்து பேர் சாப்பிடறது.. இதெல்லாம் சுத்த அராஜகம். இது எப்படி இருக்குன்னா...." கீதா பேச ஆரம்பித்துவிட்டாள். தாத்தா செத்தார். ஏராளமான விவகாரத்தை அவள் அள்ளி விட்டுக்கொண்டே இருந்தாள்.

இத்தனை நாள் கூட்டுக் குடும்பம் நடத்தினதே தப்புதான் என்று ஒப்புக்கொண்டு சாமியாராக ஓடிப்போய்விடுவாரோ என்று பயப்படுகிறபடி தாத்தாவின் முகம் பீதியில் விகாரமானது. ஒரு கட்டத்தில் இரண்டு கையையும் தூக்கி கும்பிட்டு, 'போதும் தாயீ போதும்... நான் அம்பேல் உட்டுர்றேன். என்னால முடியலே!" என்று கத்தினார். ஆகாஷ் இதெல்லாம் சகஜம் என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு கொக்கை வேடிக்கை பார்த்தான்.

'டோய் பேரா... அங்க என்னடா வேடிக்கை. இந்த பொண்ணு எம்மாம் பெரிசா பேசுது பாத்தியா? இந்த பொண்ணு கடவுளுக்கு சமமான அறிவாளி ஆயிட்டா பேரா! இனி அதை துன்பம் பண்ணக் கூடாது. அது போக்குல விடணும். அதுதான் சரி. அதை தனியா அனுப்பிடு. உன் பெத்தவங்களை ஆசிரமத்தில இருந்து கூட்டியாந்து உன் பிள்ளைங்களை வளத்துக்கோ. சரியா!" ஆகாஷ் கொக்கு பார்த்துக்கொண்டே நின்றான்.

'நீ இப்படி தென்ன மரமாட்டம் நின்னா எவதான்டா உன்கூட குடும்பம் நடத்துவா! நீ இங்கயே நில்லுஉனக்குத் தெரியாம உன் சம்சாரத்துகிட்ட நான் தனியா நாலு வார்த்தை பேசணும். நீ வா தாயீ நாம அங்க போயி பேசுவோம்!" தாத்தா கூப்பிட்டதும் சந்தோஷமாகப் போனாள் கீதா. தாத்தா தன் கட்சி என்று தெரிந்ததும் அவரை மதிப்பாகப் பார்த்தாள். படிக்காத ஆள் என்றாலும் எத்தனை அறிவு!

தள்ளி நின்று பேசிய தாத்தாவையும் கீதாவையும் புரியாமல் பார்த்தான் ஆகாஷ். அவர்கள் பேசுவது காதில் விழவில்லை. தாத்தா கீதாவிடம் என்னவோ கேட்க, அதற்கு சரிக்கு சரியாய் அவள் பதில் சொல்வது ஊமைக் காட்சியாய் தெரிந்தது. அதன் பிறகு காட்சி மாறியது. பேய் கண்டவள் போல கீதாவின் முகம் மாற, அவள் வியர்த்து தொப்பளாய் நிற்பது தெரிந்தது. பிறகு தாத்தா பேச்சோ பேச்சென்று பேசிக்கொண்டிருக்க, கீதா மண்டையை மட்டும் ஆட்டுவதும் தெரிந்தது. பிறகு தலைதொங்க கீதாவும், பெரிய சிரிப்போடு தாத்தாவும் வந்தார்கள். 'டோய் பேரா, இனிமே புருசனை விட்டு பிரியவே மாட்டேன்னு உஞ் சம்சாரம் சொல்லுது நெசமான்னு கேட்டுக்க!"

ஆகாஷால் நம்பவே முடியவில்லை. இதுவரை எண்ணிய கொக்குகளின் எண்ணிக்கை மறந்துபோய் குழப்பத்தில் நின்றான். 'என்ன தாத்தா சொல்றீங்க. எரிமலைய எப்படி ஒடைச்சீங்க."

'அதெதுக்கு பேரா இப்போ! அனுபவம் இல்லாத புத்திசாலிங்க தனக்கு கடல் தெரியும்னு சொல்வாங்க. சம்சாரக் கடலை நீந்த பெரிய கப்பல் கண்டுபிடிச்சிட்டதா உதார் உடுவாங்க. ஆனா அது ஓட்டைக் கப்பல்னு அனுபவஸ்தனுக்குத்தான் தெரியும். உன் சம்சாரம் கண்டுபிடிச்ச கப்பலு அதவிட மோசம். வெறும் உப்புக் கப்பல். கடல்ல அது மொதக்குமா?"

'புதிர் வேணாம் தாத்தோவ்! நீ என்ன சொன்ன அதை சொல்லு மொதல்ல..."

'ஒண்ணுமில்லடா பேரா! எம்மாம் பெரிய ஆளா இருந்தாலும் ஒருநா செத்துத்தான் ஆகணும். உன்னோட பொணத்தை நீயே தூக்கிட்டு சுடுகாட்டுக்கு போவியான்னு கேட்டேன். அவ்ளோதான்" தாத்தா சொன்னதைக் கேட்டதும் ஆகாஷ_க்கு சிரிப்பு வந்துவிட்டது. இந்த சின்ன கேள்விக்கேவா நொறுங்கிப் போனாள் கீதா!

'நம்பவே முடியலையே தாத்தா! நவீன காலத்தில முனிசிபாலிட்டி இருக்கு, கரண்ட் சுடுகாடு இருக்கு. காசு குடுத்தா ரொம்ப ஜோரா எரிப்பாங்கன்னு சொல்லியிருப்பாளே! ஏன் கீத்தூ முனிசிபாலிட்டி மேல நம்பிக்கை இல்லையா உனக்கு?" ஆகாஷ் கேட்டதும் ஏகிறி குதித்து சண்டைக்கு வந்தாள் கீதா. 'என்னை முனிசிபாலிட்டிக்காரன்தான் எரிக்கணுமா... நான் என்ன லாரியில அடிபட்ட நாயாபொண்டாட்டி, பொண்டாட்டீன்னு நீ கொஞ்சினது பொய்யா, நீ புருசன்தானா? மனுசன்தானா? உருப்படுவியா நீ?" அவள் அவனை புரட்டி எடுக்க, அந்த ஆக்ரோஷ சண்டையின் நடுவில் விழுந்து சமாதானம் செய்தார் தாத்தா.

'அடங்கு தாயீ... அடங்கு! நீ நூறு வருசம் சுமங்கலியா வாழப் போறவ. இப்ப எதுக்கு சாவு பத்தின பேச்சி. போய் சந்தோசமா வாழுங்க. டவுனுக்கு வந்தா உங்க வீட்டுக்கு வருவேன். ஒரு வாய் காப்பித் தண்ணி தாங்க! சுடுகாட்டப் பத்தி பேசி மெரட்டிட்டானேன்னு கிழவன தப்பா நெனைக்காதே. காப்பித் தண்ணி தருவதானே தாயீ?"

கீதா கிழவனை முறைத்தாள். கட்டிய மனைவியை முனிசிபாலிட்டி சுடுகாட்டுக்கு அனுப்பி வை என்று அப்பாவி புருசனுக்கு கெட்ட புத்தி சொல்லித் தருகிற பட்டிக்காட்டான்! அவள் தீர்மானமாகச் சொன்னாள், 'வந்துடாதீங்க மிஸ்டர் தாத்தா! வீட்டுல கொசு பேட் வெச்சிருக்கோம். அடிச்சே கொண்ணுடுவோம்!"

'ஹ்ஹா... ஹா... ஹா! நோக்காட்டுக்கு ஊசி போடற வைத்தியனப் பாத்தாவே புள்ளைங்களுக்கு ஏகமா பயம்தான்." சொல்லிவிட்டு பெரிதாய் சிரிக்க ஆரம்பித்தார் தாத்தா. குடும்பச் சமுத்திரத்தை நீந்திக் கடந்த அந்த முரட்டுக் கிழவனின் வெடிச் சிரிப்புக்கு பயந்த வயல் கொக்குகள் சடசடத்து எழும்பி வானத்தில் ஒன்று கூடி பறக்க ஆரம்பித்தன.


முற்றும்.

No comments: