Monday, June 7, 2021

தலையெழுத்து - கவிதை

தலையெழுத்து

------------------------

முதல் பக்கத்தை

காணவில்லை

இரண்டாம் பக்கத்தை கிழித்துவிட்டேன்.

மூன்றாம் பக்கத்தில்

ஏகப்பட்ட எழுத்துப் பிழை

நான்காம் பக்கத்தில்

வைக் காணோம்.

ஐந்தாம் பக்கத்தில்

பாய் இருக்கும் இடத்தில்

பேய் இருக்கிறது

ஆறாம் பக்கத்தில்

பூனைக்கு எத்தனை கால்?

ஏழாம் பக்கத்தில்

குதிரைக்கு ரெட்டைக் கொம்பா

ஒற்றைக் கொம்பா?

எட்டாம் பக்கத்தில்

எட்டணாவுக்கு

எட்டு சுழி ணாவா

ஐந்து சுழி ணாவா?

ஒன்பதாம் பக்கத்தில்...

ஒரு நிமிசம்... ஒரு சந்தேகம்.

ஒன்பதுக்கு போடும் முட்டையை

இப்படி 6 என்று

கீழே சுழிக்கணுமா?

இப்படி 9 என்று

மேலே சுழிக்கணுமா?

பத்தாம் பக்கத்தில்..

போதும் போதும்..

உனக்கு எழுதவே தெரியவில்லை

தலையெழுத்து..

உனக்கு பதில்

உன் தலையெழுத்தை

நான் எழுதுகிறேன்.


யார் நீ?


கடவுள்


உதவிக்கு நன்றி

ஓரமாய் உட்கார்ந்து

என்னைக் கவனி.

நாக்கை

மூக்கு என்று எழுதினாலும்

அது எப்படி இருந்தாலும்

கடைசி பக்கத்தை

நான்தான் எழுதுவேன்.

முதல் வரை.

அது என் எழுத்து.

-----------------------

7.6.2021



No comments: