Thursday, May 2, 2019

வயல் பூதம் - மின்புத்தகம்

இந்த அவசர யுகத்திலும், எல்லைக்குள் அடங்காத என் சாய்சதுரக் கதைகளை ஊன்றிப் படித்து, நுணுகி ரசித்து பாராட்டுகிற பரந்துபட்ட கதா பிரியர்களுக்கு நான் தலை வணங்கியே ஆகவேண்டும். கதையின் மையம் விலகிச் சென்று வாழ்வின் வேறு கூறுகளை மின்னல் வெட்டிச் செல்கிற அத்துமீறல்களைத் தான் அவர்கள் வியப்பதும், சுட்டிக்காட்டுவதும். சிற்பத்தின் நகக் கண்களையும் நுட்பத்தோடு ஒரு சிற்பி ஏன் செதுக்குகிறான் என்பதற்கு, வந்தடைகிற பாராட்டுகளே காரணம். 
பெற்றவர்களுக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும், கதைகளுக்கும் கூடுதலான நேரத்தை ஒதுக்கினால் வாரத்தின் ஏழாம் நாளை நாய் தின்றுவிடும் என்ற அச்சத்தை நம்பாதவன் நான். நேரம் ஒதுக்கினால் கதைகளும், உறவுகளும் சுவாரஸ்யமான ஜீவன்கள் என்பது புரிபடும்.
இன்னொரு முக்கிய விவகாரம்... மொழியின் பரிசுத்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கானது. மொழியின் இலக்கணம் என்பது அத்து மீறி பக்கத்து வீட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் நம்பிக்கையுள்ளவன்தான் நான். ஆனாலும் சில அத்தியாவசியமான கணங்களில் மொழி தன்னளவில் வரம்பு மீறுவதையும் தவிர்க்க ஏலாது. 'ஆயிரம் இலைகளுக்கும் ஒரே கிளை' என்பதுதான் இலக்கண வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், அக் கதை சொல்ல விழைகிற ஆதாரமான விஷயம் பிரபஞ்ச ஓர்மை; உயிர்களுக்கு நடுவில் ஒரு ஜீவ ஓர்மை. அதனால்தான் பன்மையில் இல்லாமல் 'ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை' என்று ஓர்மையில் தலைப்பிட்டேன். 
“ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும்
ஓரிடம் பிறஇடந் தழுவலும் உளவே!" என்றும், 
'ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை 
மாற்றிஓர் அடியுள் வழங்கல்மொழி மாற்றே!" 
என்றும் சொல்லப்பட்ட நன்னூல் இலக்கணத்தை நான் இங்கே மேற்கோள் காட்டுவது என் தப்பிலக்கணத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காக அல்ல! வாழ்வின் இக்கட்டிற்காக இலக்கணங்கள் சிலபோது மீறப்படலாம் என்பதையும் சுட்டுவதற்கே. இலக்கண வரம்பிற்கு உட்படாத இக் கதா தலைப்பை உச்சரிக்கும்போது அதில் ஓசையின்பத்தையும், ஒற்றைப் புள்ளிக்குள் இப் பிரபஞ்சம் குவிந்து நிற்கிற உணர்வின் இன்பத்தையும் நான் உணர்ந்தேன். தலைப்பின் கதையை படித்தால் நீங்களும் அதை உணர்வதற்கு சாத்தியமுண்டு. உணர்ந்து பாருங்கள்.
..
 அன்புடன்
எழில்வரதன்.

No comments: